ஆட்டுவிப்பார் இல்லாத இடம் ஏது? சிவசேனா நாளிதழ் சாம்னாவின் எடிட்டரானார் உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி!
மும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னவின் ஆசிரியராக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவசேனாவின் நாளிதழாக 1988-ம் ஆண்டு முதல் வெளிவருகிறது சாம்னா. இதன் பொறுப்பாசிரியராக கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இருந்து வருகிறார்.
மகாராஷ்டிராவில் பாஜகவுடனான சிவசேனா கூட்டணி உறவு முறிவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் சஞ்சய் ராவத். அதேபோல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து சிவசேனாவுக்கே முதல்வர் பதவி என்பதில் பிடிவாதம் காட்டியவரும் சஞ்சய் ராவத்.
இருப்பினும் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அமைச்சரவை தொடர்பாக மாறுபட்ட கருத்துகளை சாம்னவில் சஞ்சய் ராவத் வெளிப்படுத்தியிருந்தார். அவரது சகோதரருக்கு அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் சஞ்சய் ராவத் இக்கருத்தை வெளிப்படுத்தியிருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் சஞ்சய் ராவத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் சிவசேனாவின் ஆசிரியராக உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சிகள் நடத்தும் நாளிதழ்கள், டிவி சேனல்களில் கட்சி தலைவரின் குடும்பத்தினர் ஆதிக்கம் ஓங்குவது வழக்கமான ஒன்றுதான்.
Maharashtra CM and Shiv Sena leader Uddhav Thackeray's wife Rashmi Thackeray named the new editor of Shiv Sena mouthpiece Saamana. (file pic) pic.twitter.com/6DEOEU6gVB
— ANI (@ANI) March 1, 2020
தமிழகத்தில் ஜெயலலிதா இருந்த போது ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஆகியவை சசிகலா குடும்பத்தின் வசமானது. இப்போது தினகரன், அமமுகவை தொடங்கிய நிலையில் இந்த இரண்டும் சசிகலா குடும்பம் வசமாகிவிட்டது. திமுகவில் ஒருகாலத்தில் ஏராளமான பத்திரிகைகள் வெளியாகின. ஆனால் இவற்றையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்போது கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தமான முரசொலிதான் அதிகாரப்பூர்வ நாளேடாக இருக்கிறது. கருணாநிதியின் குடும்பத்தினர் வசம்தான் முரசொலி இருக்கிறது.
அதிமுகவின் தற்போதைய நமது அம்மா, நியூஸ் ஜே ஆகியவையும் அதிமுக அமைச்சர்களின் குடும்பத்தினர் வசம்தான் இருக்கிறது. இந்த வரிசையில்தான் தற்போது சிவசேனாவும் தங்களது கிச்சன் கேபினட்டை கட்சிக்குள் களமிறக்கியிருக்கிறது.
ஏற்கனவே உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவை அமைச்சராக்கியதற்கு எழுந்த புகைச்சலே அடங்கவில்லை. இப்போது ராஷ்மி நியமனத்துக்கு எந்த ரூபத்தில் பிரச்சனை வெடிக்குமோ? என கவலைப்படுகின்றனர் சிவசேனா சீனியர்கள்.