3 மாத அவகாசம் கொடுத்த ரிசர்வ் வங்கி.. உங்கள் EMI என்ன ஆகும்?
மும்பை: அனைத்து வகை கடன்களின் ஈ.எம்.ஐ தவணைகளை 3 மாத காலம் ஒத்தி வைக்கலாம் என்று வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ்களை அறிவித்தார். இது தவிர அந்தந்த மாநில அரசுகளும் ரேஷன் கடை வாயிலாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.
ஆனால், மத்தியதர வர்க்கத்தினர் பலரும் இன்ஸ்டால்மென்ட் அதாவது இஎம்ஐ மூலமாக பொருட்களை வாங்கியுள்ளனர். இப்போது பணிக்கு செல்ல முடியாமல் விடுமுறையில் இருப்பதால் அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, மத்தியதர வர்க்கம் தரப்பில், வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு ஒத்திப்போட வேண்டும், என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில்தான், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார்.
இந்த நிலையில்தான், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில், அனைத்து வகை தனி நபர் கடன்களின் ஈ.எம்.ஐ தவணைகளை 3 மாத காலம் ஒத்தி வைக்கலாம். இதற்கு ஆர்பிஐ அனுமதிக்கிறது. இந்த 3 மாதங்கள், கடன் திரும்ப வரவில்லை என்றால், இதை வராக்கடனாக கருதக்கூடாது. சிபில் ஸ்கோரில் அதை சேர்க்க கூடாது. கடன் செலுத்தாததால் திவால் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எனவே, ஜூன் மாதம் வரை இ.எம்.ஐ கட்டுவதை ஒத்திப்போடலாம். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
- இஎம்ஐகள் ஒத்திப்போடப்பட்டுள்ளதே தவிர, 3 மாதங்களுக்கான கடனும், வட்டியும், தள்ளுபடி செய்யப்படவில்லை. ஒருவர் 60 மாத காலத்திற்கான கடனை வாங்கியிருந்தால், அவர் 60 மாதங்களும் கடன்+வட்டியை கட்டித்தான் ஆக வேண்டும்.
- இதுவரை 7 மாதங்களுக்கு ஒருவர் கடன் மற்றும் வட்டியை இஎம்ஐயாக செலுத்தியிருப்பார் என வைத்துக்கொள்வோம், அவர் இந்த மூன்று மாத இடைவெளி முடிந்த பிறகு, மறுபடியும் இஎம்ஐ கட்டத் தொடங்கும்போது, 8வது வாரத்திலிருந்து அவர் இஎம்ஐ செலுத்துவதாகவே பொருள் கொள்ளப்படும்.
- வங்கிகள் இஎம்ஐகளை 3 மாதங்கள் ஒத்தி வைக்கலாம் என ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளதே தவிர கட்டாயப்படுத்தியதாக சொல்ல முடியாது
- அந்தந்த வங்கிகள்தான், இஎம்ஐகளை ஒத்திவைப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும்
- மக்கள் கையில் வருமானம் இல்லை என்பதால், ஆர்பிஐ அனுமதியை ஏற்று 3 மாதங்களுக்கு இஎம்ஐயை ஒத்திவைக்கவே அனைத்து வங்கிகளும் முடிவு செய்யும் என்பதுதான் பொருளாதார வல்லுநர்கள் கருத்து
- ஒருவேளை, கடன் இஎம்ஐகளை வங்கிகள் ஒத்திவைக்காவிட்டால், வாடிக்கையாளர்கள் அந்த காலகட்டத்தில் செலுத்தாத, இஎம்ஐ வராக்கடன் லிஸ்டில் சேர்ந்துவிடும். இது வங்கிக்குதான் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும். எனவே ஆர்பிஐ அனுமதியை, வங்கிகள் பயன்படுத்திக்கொள்ளும் என்பதே எதிர்பார்ப்பு.
- ரெப்போ விகிதம் 75 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே வாங்கிய வீட்டுக்கடன், கார் மற்றும் வாகன கடன்கள், மீதான வட்டி குறையும்.
- ரிசர்வ் வங்கி அறிவிப்புபடி, தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், கல்விக் கடன்கள் போன்ற அனைத்து தரப்பு கடன்களுக்கும், இந்த விதிமுறை பொருந்தும். ஏ.சி., ஃப்ரிட்ஜ், மொபைல் போன்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்காக வாங்கப்பட்ட கடன்களுக்கும் 3 மாத சலுகை அளிக்கப்பட்டுள்ளது
- கிரெடிட் கார்டு கடனுக்கு இந்த விலக்கு பொருந்தாது.
- வணிக நிறுவனங்கள் வாங்கும் மூலதன கடன்களைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கி, வட்டி செலுத்துதல்களை தள்ளி வைக்க அனுமதித்துள்ளது. இது 2020, மார்ச் 1ம் தேதிவரை நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும் பொருந்தும்.