ஆன்லைன், டிஜிட்டல் நிதி மோசடிகளை கட்டுப்படுத்த புது திட்டம்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு
மும்பை: டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகளை உடனுக்குடன் கண்காணிப்பதற்கும், வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும், மத்திய பேமென்ட் மோசடி பதிவேட்டை, உருவாக்க உள்ளதாக, ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய நிதிக் கொள்கை இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், "நிதி மோசடியை குறைக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், விரைவான மற்றும் முறையான பதில்களை உறுதி செய்வதற்கும், நிதி மோசடி பதிவேட்டை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
பேமென்ட் சேவை வழங்குவோருக்கு இந்த பதிவேட்டுக்கான ஆக்சஸ் வழங்கப்படும். அதிகரித்து வரும் அபாயங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒருங்கிணைந்த மோசடி டேட்டா விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது விரிவான தகவல்கள் அக்டோபரில் வெளியிடப்பட உள்ளது. ஆன்லைன் பணம் செலுத்துதல் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான மோசடிகளைத் தடுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
தற்போது, அனைத்து வகை வங்கி மோசடிகளையும் ரிசர்வ் வங்கியின், மத்திய மோசடி கண்காணிப்புப் பிரிவுக்கு அறிக்கையாக வழங்க, வங்கிகளுக்கு ஒரு வழிமுறை உள்ளது. இப்போது அறிவிக்கப்படும் ரிஜிஸ்டரி என்பது, அனைத்து பேமென்ட் ஆபரேட்டர்களுக்கும் இந்த வசதியை நீட்டிக்கக்கூடும்.
டிசம்பர் முதல், 24 மணி நேரமும் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைனில் பணம் அனுப்பலாம்.. ஆர்பிஐ அதிரடி
டிஜிட்டல் பேமென்ட், கட்டணம் செலுத்துதல் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் மதிப்பு கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில், மோசடி ஆபத்து கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை முக்கியத்துவம் பெறுகிறது என்று சக்தி காந்த தாஸ் தனது பேட்டியில் தெரிவித்தார்.
நந்தன் நிலேகனி கமிட்டி அறிக்கை மற்றும் 2019 முதல் 2021 வரையிலான ரிசர்வ் வங்கியின் பேமென்ட்ஸ் விஷன் ஆவணம் ஆகியவை, மத்திய மோசடி பதிவேடு உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.