அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி கொடுத்தாச்சு.. ரிசர்வ் வங்கியில் எவ்வளவு பணம் மிச்சம் இருக்கு தெரியுமா?
மும்பை: ரிசர்வ் வங்கி சாதனை அளவாக, 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் அவசர நிதி (contingency) ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ .1.96 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாயை செலுத்திய பின்னர், ஜூன் 30, 2019 நிலவரப்படி, அவசர நிதி இருப்பு ரூ .1,96,344 கோடியாக இருந்தது, இது ஜூன் 30, 2018 நிலவரப்படி ரூ .2,32,108 கோடியாக இருந்தது, என்று ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த திங்கள்கிழமை, 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு ரிசர்வ் வங்கி, மாற்றிக் கொடுத்தது. இந்த தொகை ஐந்தாண்டுகாலத்தின் சராசரியான ரூ .53,000 கோடியை ஒப்பிட்டால் மூன்று மடங்கு அதிகமாகும்.
இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது.. சரி செய்ய இதுதான் வழி.. ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை வெளியீடு
உள்நாட்டு வருமானம்
உள்நாட்டு மூலங்களின் வருமானம் முந்தைய நிதியாண்டில் ரூ .50,880 கோடியாக இருந்தது. அது 132.07 சதவீதம் அதிகரித்து ரூ .1,18,078 கோடியாக உயர்ந்து உள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி மோசடி
அதேநேரம், வங்கி மோசடி வழக்குகள் 2018-19ல் 15% அதிகரித்துள்ளன என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பண மதிப்பு என்று பார்த்தால் நடப்பு நிதியாண்டில் மோசடியின் மதிப்பு 73.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில், வங்கித் துறை ரூ .71,542.93 கோடி மதிப்புள்ள 6,801 மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது.
மோசடி மதிப்பு
2018-19 ஆம் ஆண்டில் பதிவான மோசடிகளில் பெரும்பகுதி பொதுத்துறை வங்கிகள் தொடர்பானதுதான். அரசு வங்கிகள் ரூ .64,509.43 கோடி மதிப்புள்ள 3,766 மோசடிகளை பதிவு செய்துள்ளன. முந்தைய நிதியாண்டில் 2,885 வழக்குகள் பதிவாகியிருந்தன. மோசடி மதிப்பு 38,260.8 கோடி ரூபாய்.
இன்டெர்நெட் மோசடி குறைவு
சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், கார்டுகள் மற்றும் இணையம் வழியான பரிமாற்றத்தில் மோசடி குறைவாகவே நடந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டின் மொத்த மோசடி மதிப்பில் 0.3 சதவீதம் மட்டுமே இதுபோன்ற மோசடிகளாகும்.