சர்ப்ரைஸ்.. ரெப்போ விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி.. கடன்களுக்கு வட்டி குறையும், பணப்புழக்கம் கூடும்
மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ (repo) விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதால், வீட்டுக்கடன் உள்ளிட்ட தனி நபர்கள் பெறும் கடன்கள் மீதான வட்டிகளும் குறையும்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் 6 பேர் கொண்ட நாணய கொள்கை கமிட்டி (MPC), கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அதில், ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. எனவே வட்டி விகிதம் 6.50% என்ற அளவில் இருந்து 6.25% என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், 4-2 என்ற வாக்குகள் அடிப்படையில் இந்த முடிவுக்கு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
பெரிய முடிவு
சக்திகாந்த தாஸ், 2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, எடுக்கப்பட்ட மிகப்பெரிய கொள்கை மாற்ற முடிவு இதுவாகும். கடைசியாக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. 17 மாதங்களுக்கு பிறகு பொருளாதார நிபுணர்களுக்கே 'சர்ப்ரைசிங்காக' ரெப்போ விகிதம் இப்போது குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி விகிதம்
ரெப்போ விகிதம் என்பது, ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு வழங்கப்படும், நிதிக்கான வட்டி அளவாகும். ரெப்போ விகிதத்தை குறைக்கும்போது வணிக வங்கிகளுக்கு நிதிப்புழக்கம் அதிகரிக்கும். அவற்றின் வட்டி சுமை குறைவதால், அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றிவிடப்படும் என்பதால், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளவர்களுக்கு பலனாகும்.
வீட்டுக்கடன்
0.25 சதவீதம் வட்டி விகிதம் குறைந்து உள்ள நிலையில், ஒரு உதாரணத்தை பார்க்கலாம். இப்போது நீங்கள் வீட்டுக் கடன் வட்டியாக 9.5 சதவீதம் செலுத்தி வந்தால் அது 9.25 சதவீதமாகக் குறைய வாய்ப்பு உள்ளது. நீங்கள் 25 லட்சம் வீட்டுக் கடனாக பெற்றுள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். கடனை அடைக்க 15 வருட காலம் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் எனக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் இப்போது நீங்க 26,105 ரூபாய் தவணையாக செலுத்த வேண்டி வரும். இப்போது 0.25 சதவீதம் ரெப்போ குறைக்கப்பட்டால் உங்களுக்கு மாதம் 375 ரூபாய் சேமிக்க இயலும். இதுவே மொத்த கடனில் 67,645 ரூபாய் சேமிக்க இயலும். இது ஒரு உதாரணம்தான். உங்கள் கடன் கால அளவை பொறுத்து சேமிப்பு மாறுபடும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்
இஎம்ஐ கட்டும் அளவு குறைவதால் தனி நபர்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஏற்கனவே மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள கவர்ச்சிகர திட்டங்களால் பணப்புழக்கம் அதிகரித்து, பண வீக்கம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் விலைவாசி உயரக்கூடும் என்பது மற்றொரு அம்சமாகும்.
கட்டுக்குள் விலைவாசி
அதேநேரம், பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும் என்று சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், பணவீக்கம் விகிதம் 3.2-3.4% என்ற அளவிலும் 3வது காலாண்டில் 3.9% என்ற அளவிலும் இருக்கும் என தெரிவித்தார். அதேநேரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி 2019-20ம் நிதியாண்டில், 7.4% என்ற அளவில் வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு, கட்டுமானப் பணிகளும் வேகம் பிடிக்க வாய்ப்புள்ளதால் இது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்புதான்.