ரிசர்வ் வங்கி அதிரடி.. ரெப்போ விகிதத்தில் 25 புள்ளி குறைப்பு! கடன் மீதான வட்டி குறையும்
மும்பை: ரெப்போ ரேட்டில், 25 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. 5.75% என ரெப்போ விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தது ஆர்பிஐ. இதன் மூலம், கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் பதவியேற்ற பிறகு, 3வது முறையாக அடுத்தடுத்து குறைக்கப்பட்டுள்ள ரெப்போ விகிதம் இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம், ரெப்போ விகிதம், 6.50லிருந்து, 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஏப்ரலில் இது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் மாத நிதிக்கொள்கையின் ஒரு அம்சமாக, ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளில் பெற்ற கடன்கள் மீதான வட்டி குறையும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகும்.
2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், பணவீக்க விகிதம் என்பது 3.0 சதவீதம் முதல் 3.1 சதவீதம் என்ற அளவில் இருக்கும், இரண்டாவது அரையாண்டில் இது மேலும் உயர்ந்து 3.4% முதல் 3.7% என்ற அளவில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.2 சதவீதம் அளவுக்கு இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், 7 சதவீதம் அளவுக்குதான் வளர்ச்சி இருக்கும் என இன்றைய கூட்டத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.