வங்கிகளில் கடன் வாங்கியுள்ளீர்களா.. உங்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரெப்போ ரேட்டை குறைத்தது ரிசர்வ் வங்கி
Recommended Video
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.15 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மக்கள் கையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க இது உதவும் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.
நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, 6.9 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளது ஆர்பிஐ. இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமும், 2019-20 இரண்டாம் பாதியில் 6.6-7.2 சதவீதமும் ஜிடிபி உயரும் என்று எதிர்பார்ப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வளர்ச்சி வேகம் இருக்கும் வரை மற்றும் வளர்ச்சி புத்துயிர் பெறும் வரை ரிசர்வ் வங்கி இதுபோல தனது கொள்கைகளை இலகுவாகவே வைத்திருக்கும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
6 ஆண்டுகளுக்கு பிறகு, மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியை நாடு இப்போது எட்டியுள்ளது. லட்சக்கணக்கான வேலை இழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில்தான், ரிசர்வ் வங்கி ஆளுநர் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜூன் காலாண்டில் பொருளாதாரம் வெறும் 5 சதவீத வளர்ச்சியில்தான் இருந்தது. 2013க்கு பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி குறைந்தது.
ரெப்போ விகிதம் எனப்படுவது, வணிக வங்கிகளில் ரிசர்வ் வங்கியிடம் பெறும் பணத்திற்காக வழங்கப்படும் வட்டி அளவாகும். இதை ரிசர்வ் வங்கி குறைத்தால், வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி குறையும். இதேபலனை, தனது வாடிக்கையாளருக்கும், வங்கிகள், 'பாஸ்' செய்ய வேண்டும் என்று நிதித்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பெல்லாம் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டாலும், வங்கிகள் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் கூட இருந்திருக்கின்றன. இனி அது நடக்காது. எனவே, ரெப்போ விகித குறைப்பால், வங்கிகளில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதமும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.