ரெப்போ விகிதம் 75 புள்ளி குறைப்பு.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு! வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும்
மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரெப்போ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.40% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு, 5.15 சதவீதம் என்ற அளவில் ரெப்போ இருந்தது.
Recommended Video
ரெப்போ குறைந்ததால், வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன் மீதான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு உள்ளது. ரெப்போ என்பது, ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் மீதான வட்டியை குறிக்கும் சொல். அந்த வட்டி குறையும்போது, அதன் பலனை வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சென்று சேர்ப்பதுதான் வழக்கம்.
வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில், 75 அடிப்படை புள்ளிகளால் குறைந்துவிட்டால், அது உங்கள் ஈ.எம்.ஐ மற்றும் மொத்த வட்டி செலவை எவ்வாறு குறைக்கும் என்பதைப் பார்ப்போம்.
ஒருவர் 15 வருடங்களுக்கு ரூ .35 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம், ஈ.எம்.ஐ மற்றும் வட்டி சேமிப்பு:
ஈ.எம்.ஐ சேமிப்பு - ரூ .1533 (ஆண்டுதோறும் ரூ .18,396)
மொத்த வட்டி சேமிக்கப்படப்போவது - ரூ .2.76 லட்சம்
அதேநேரம், ஆர்பிஐ அறிவித்துள்ளது அடுத்த 3 மாதங்களுக்கு மட்டுமே. அதன்பிறகு எப்படி மாற்றப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வீட்டுக் கடன்களை அடிப்படை வீதத்துடன் அல்லது பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் வீதத்துடன் (பிபிஎல்ஆர்) இணைக்கப்பட்டுள்ளோர், வெளிப்புற மாற்றத்திற்கு ஏற்ப கடன் வட்டி மாறும் ஆப்ஷனுக்கு மாறுவது நல்லது. அடிப்படை வீதம் மற்றும் பிபிஎல்ஆர் வீதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களுடன் ஒப்பிடுகையில் பாலிசி மாற்றத்திற்கு ஏற்ப மாறும் வட்டி ஆப்ஷனை தேர்ந்தெடுத்தவர்கள் அதிக பலனை பெற முடியும் என்ற சூழ்நிலைதான் நிலவுகிறது.