மத்திய அரசுடன் மோதல் நிலவும் சூழலில்.. 9 மணி நேரம் நடந்த ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டம்
மும்பை: பரபரப்பான சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் சுமார் 9 மணி நேரம் நடைபெற்றது.
மும்பையிலுள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்தில், அதன் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நடுவேயான மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியிடம், ரூ.9.59 லட்சம் கோடி உபரி நிதி உள்ளது. அதில், வங்கிகளின் சீர்திருத்த திட்டங்களுக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்கவும், ரூ.3.60 லட்சம் கோடி ஒதுக்க, மத்திய அரசு கோரியதாக தகவல் வெளியானது.
இக்கோரிக்கையை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. இதனால், ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. எனவே, ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் பட்டேல், விரைவில் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், தாங்கள் நிதி கேட்கவில்லை என்று, மத்திய அரசு மறுத்தது. இந்த நிலையில், உர்ஜித் படேல் தலைமையில், ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில், உபரி நிதியில், கடன் பத்திரங்களை வாங்கி நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், ரூ.25 கோடி வரையிலான கடனை, மறுசீரமைப்பு செய்வது பற்றியும் பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது.
ரிசர்வ் வங்கி 9 சதவீத மூலதன ஆதாய விகிதத்தை கடை பிடிக்கிறது. சர்வதேச வங்கிகள் 8 சதவீத மூலதன ஆதாய விகிதத்தைதான் கடை பிடிக்கின்றன. எனவே, மூலதன ஆதாய விகிதம் தொடர்பான விதிகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அவ்வாறு செய்தால், ஆந்திரா வங்கி, அலகாபாத் வங்கி போன்ற 11 வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கெடுபிடியிலிருந்து வெளியே வரும். கடன் தருவது, விரிவாக்க நடவடிக்கைகளில் அந்த வங்கிகளால் ஈடுபட முடியும்.
பாஜகவின் வாக்கு வங்கி சிறு, குறு தொழிலதிபர்கள் என்பதால், வங்கிகளில் எளிதாக தொழில் கடன் கிடைப்பதை உறுதி செய்வதே வரும் தேர்தலில் தங்கள் வெற்றிக்கு உதவும் என்று நினைக்கிறது. எனவே ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
இரவு 7.45 மணிவரை இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி 9 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பாக நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.மேலும், சிறு மற்றும் குறுந்தொழில்முனைவோருக்கு 25 கோடி ரூபாய் வரை கடன் வழங்கலாம் என்றும் முடிவு எட்டப்பட்டது. அரசின் பங்கு பத்திரங்களை வாங்குவதற்காக 8000 கோடியை செலவிடுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதனால், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையே நிலவி வந்த மோதல் தற்காலிகமாக தணிந்துள்ளதாக கருதப்படுகிறது.