அதிகபட்சமே இந்த பேங்க் அக்கவுண்டிலிருந்து ரூ.1000தான் எடுக்க முடியும்.. ஆர்பிஐ அறிவிப்பால் பரபரப்பு
மும்பை: பஞ்சாப் மற்றும் மும்பை மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட் (PMC) நடவடிக்கைகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) அடுத்த ஆறு மாதங்களுக்கு தடை விதித்துள்ளது. புதிதாக எந்த ஒரு கடனும் வழங்கக்கூடாது என்பதும் இதில் ஒரு நிபந்தனையாகும்.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக அவர்கள் அக்கவுண்டிலிருந்து ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுக்க முடியாது.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மும்பையைச் சேர்ந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி இப்படி, ஆறு மாத தடை விதித்துள்ளது. வங்கி இடமாற்றம் சட்டம், 1949 இன் பிரிவு 35 ஏ இன் கீழ் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. பிரிவு 35 ஏ இன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் அதிகம்
ரிசர்வ் வங்கி தனது உத்தரவில், வாடிக்கையாளர்கள், தங்கள் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த கணக்கிலிருந்தும் வரும் ஆறு மாதங்களில் ரூ .1,000 க்கு மேல் திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான கடனையும் கொடுக்க முடியாது.
வாடிக்கையாளர்கள்
இந்த, வங்கியில் 11.5 பில்லியன் ரூபாய் வாடிக்கையாளர்களின் வைப்பு உள்ளது. எனவே இருப்பு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுமே, அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மிகவும் கலக்கத்தில் உள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
ஜோகேஸ்வரி வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் கலாட்டாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வங்கிக்கு பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, கோவா மற்றும் பல மாநிலங்களில் பரவலாக கிளைகள் அமைந்துள்ளன. அங்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சரியாகிவிடும்
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி , தலைவர் ஜாய் தாமஸ் கூறுகையில், "ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்கு வருந்துகிறோம். இதன் காரணமாக, ரிசர்வ் வங்கி எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்களுக்கு சிரமங்களை சந்திக்க நேரிடும். வங்கி தலைவராக இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன்னரே, எங்கள் குறைபாடுகளை சரிசெய்வோம் என்று அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.