ரெப்போ விகிதத்தை மீண்டும் குறைத்த ரிசர்வ் வங்கி.. இனியாவது வேகம் பிடிக்குமா பொருளாதாரம்?
மும்பை: ரிசர்வ் வங்கி மீண்டும் ஒருமுறை தனது ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ள ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கையும் குறைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2019-20 ஆம் ஆண்டிற்கான தனது மூன்றாவது நிதிக் கொள்கையை இன்று காலை 11.45 மணிக்கு அறிவித்தது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில், நடைபெற்ற நிதி கொள்கைக் குழு (எம்.பி.சி) மூன்று நாள் கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தின் தீர்மானம் காலை 11.45 மணிக்கு வெளியிடப்பட்டது.
இதன்படி ரெப்போ ரேட் 35 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கு, 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மே மாதம் தொழில்துறை வளர்ச்சி குறைந்துள்ளது. உற்பத்தி, சுரங்கம் துறைகளின் வீழ்ச்சியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மின்துறை முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மந்தமான பொருளாதார வளர்ச்சியை, அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. தொடர்ச்சியாக நான்காவது முறை, வெளியிடப்படும் ரெப்போ வீதக் குறைப்பு அறிவிப்பு இதுவாகும். ரெப்போ விகிதம் குறைக்கப்படுவதால், வணிக வங்கிகள், குறைந்த வட்டியில், வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் வழங்க முடியும்.