இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மத்திய அரசுக்கு, ரூ.28,000 கோடி இடைக்கால டிவிடெண்ட்: ஆர்பிஐ
மும்பை: மத்திய அரசுக்கு ரூ.28,000 கோடியை இடைக்கால பங்குத் தொகையாக வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
மத்திய அரசு, தனது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியின் கணிசமான பங்கை தனக்கு மாற்றுமாறு வற்புறுத்தி வந்தது.
இதற்கு, இதற்கு, ரிசர்வ் வங்கியின், முந்தைய ஆளுநரான உர்ஜித் படேல் உடன்படவில்லை. இருப்பினும் மத்திய அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால்தான், உர்ஜித் பட்டேல், உடல் நிலையைக் காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநராக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளர், சக்தி காந்ததாஸ் ஆர்பிஐ கவர்னராக்கப்பட்டார். இப்போது, மத்திய அரசு-ரிசர்வ் வங்கி நடுவேயான உறவு சுமூகமாகியுள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசுக்கு ஏற்கெனவே நடப்பு நிதியாண்டில் 40,000 கோடி ரூபாய் இடைக்கால டிவிடெண்டாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 28,000 கோடி ரூபாயை வழங்க ரிசர்வ் வங்கி, மத்திய வாரியக் கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு இப்படி தொகையினை வழங்குவது இது தொடர்ந்து 2வது ஆண்டாகும்.
இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு தேவைப்படும் நிதியை ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு பெறுகிறது. இதனால் நிதிப்பற்றாக்குறை பிரச்சினை குறையும் என மத்திய அரசு கருதுகிறது.