மத்திய அரசின் அழுத்தங்களுக்கு பணிந்த ரிசர்வ் வங்கி.. உபரி நிதி விவகாரம் பற்றி ஆய்வு செய்ய குழு
Recommended Video
மும்பை: ரிசர்வ் வங்கி விவகாரத்தில், மத்திய அரசு தலையிடுவதாக விமர்சனம் எழுந்த நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தலைமையில், துணை ஆளுநர்கள், மத்திய அரசின் நியமன இயக்குநர்களான பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நிதி சேவைகள் துறை செயலர் ராஜீவ் குமார், எஸ். குருமூர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் காலை 10 மணி முதல் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. வழக்கமான இயக்குநர்கள் கூட்டத்தைவிட இது, அதிகபட்ச நேரம் என்பதால், ஊடகங்கள் பரபரத்தன.
கூட்டத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
- ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதி ரூ.9.69 லட்சம் கோடி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்கலாம். கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் செயல்பாடு குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இணைந்து முடிவெடுக்கும்.
- சிறு மற்றும் குறுந்தொழில்முனைவோருக்கு 25 கோடி ரூபாய் வரை கடன் வழங்கலாம்
- ரூ.8000 கோடி வரையிலான கடன் பத்திரங்களை மத்திய அரசிடம் இருந்து வாங்குவது.
- ரிசர்வ் வங்கியின் முடிவுகள் அனைத்துமே மார்க்கெட்டில் நிதி புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளாகும்.
இதனிடையே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மீடியாக்களும்தான், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் நடுவே மோதல் நிலவுவதாக தெரிவித்து வருகிறார்கள். கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி ஆளுநர்களாக இருந்தவர்களை, அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எவ்வாறு பணிநீக்கம் செய்தன என்பது குறித்து நாட்டு மக்கள் அறிவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியிலுள்ள உபரி நிதியை மத்திய அரசு கேட்டு வருவதாக வெளியான செய்திகளுக்கு நடுவே, அது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், மத்திய அரசின் நெருக்கடிக்கு ரிசர்வ் வங்கி பணிந்துள்ளதாகவே தெரிகிறது. அதேநேரம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யப்போவதாக வெளியான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.