‘ஏன் மாஸ்க் அணியக்கூடாது’.. நேரடியா சொல்லியே புரியல.. பார்ப்போம் இப்டி சொன்னாவாது திருந்துறாங்களானு!
'முகக்கவசம் அணிய தேவையில்லை என்பதற்கு எந்த காரணமும் இல்லை' எனக் கூறும் நாக்பூர் போலீசாரின் வித்தியாசமான அறிவிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மும்பை: முகக்கவசம் அணிவது தொடர்பான நாக்பூர் போலீசாரின் வித்தியாசமான அறிவிப்பு சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் அம்சங்களில் முதலாவதும், முக்கியமானதாகவும் கருதப்படுவது முகக்கவசம் அணிதல். இதன் மூலம் கொரோனா வைரஸ் நம் வாய் மற்றும் மூக்குப் பகுதிகளின் வழியே உள் செல்லாமல் தற்காத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான மக்கள் அதனை காதில் போட்டுக்கொள்வதாகவே தெரியவில்லை. முகக்கவசம் அணிவதை பலரும் அசௌகரியமாக கருதுகின்றனர். எனவே முகக்கவசத்தை கொண்டு, வாயையும், மூக்கையும் மூடுவதற்கு பதிலாக பலரும் தாடையில் மாட்டிக்கொண்டு திரிகின்றனர்.
அமெரிக்கா, பிரேசில் எட்டாத உயரம்.. ஒரே நாளில் 83000 பேருக்கு இந்தியாவில் தொற்று
விழிப்புணர்வு பிரச்சாரம்
இதுதொடர்பாக அரசாங்கம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் அதை புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. இந்த சூழலில் முகக்கவசம் அணிவது தொடர்பான நாக்பூர் போலீசாரின் வித்தியாசமான பிரச்சாரம் ஒன்று நன்றாக எடுபட்டுள்ளது.
பூடகமாக அறிவுரை
நாக்பூர் போலீஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " ஏன் மாஸ்க் அணியக் கூடாது என்பதற்கான காரணங்கள்", எனக் குறிப்பிட்டு எதுவும் எழுதப்படாத வெள்ளை காகிதத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதாவது மாஸ்க் அணியக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என பூடகமாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அபாஷ்
நாக்பூர் போலீசாரின் இந்த பதிவு நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது. அவர்களது அறிவாற்றலை பலரும் பாராட்டியுள்ளனர். அதேசமயம் 'நேரடியாக சொல்லியே கேட்காத இந்த மக்களுக்கு, இப்படி பூடகமாக சொன்னால் புரியவாப் போகிறது' என்ற கமெண்டுகளையும் பார்க்க முடிகிறது.
ஆரம்பம் முதலே
இருந்தாலும் எதிர்மறையாக சொல்லியாவது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற நாக்பூர் போலீசாரின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. ஏனென்றால் கொரோனா தாக்கம் ஆரம்பித்ததில் இருந்தே மக்களிடம் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு விசயங்களை பகிர்ந்து வருகின்றனர் களப் பணியாளர்களாக இருக்கும் போலீசார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.