இன்றும் நாளையும் மும்பைக்கு ரெட் அலர்ட் வார்னிங்.. மிக அதிக கனமழை பெய்யும்.. வானிலை மையம்
Recommended Video
மும்பை: இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தற்போது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. நேற்று முன் தினம் மாலை முதல் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் காணும் இடங்கள் எல்லாம் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
உள்ளூர் ரயில் சேவை
பாத்லாபூர், தாணே, நவி மும்பை ஆகிய பகுதிகளில் 24 மணி நேரத்தில் 219 மி.மீ. மழை பெய்துள்ளது. மும்பையில் கனமழை பெய்துள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்கள் தண்ணீர் தேங்கியுள்ளதால் உள்ளூர் ரயில் சேவை வழக்கம் போல் இயங்கி வருகிறது.
9 விமானங்கள் மாற்று பாதை
வானிலையில் தெளிவற்றத்தன்மை இருப்பதால் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 9 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 200 மி.மீ.ருக்கு மேல் மழை பெய்துள்ளது. அதில் சாந்தாக்ரூஸ்- 219, அந்தேரி- 201, பாத்லாபூர் 447, விக்ரோலி -215, நேருல்- 240, முர்பாத் 332 ஆகிய இடங்களில் மழையானது மி.மீ. அளவில் பதிவாகியுள்ளது.
ரெட் அலர்ட் வார்னிங்
தானே, ராய்காட், பால்கர், மும்பை ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது. அது போல் கொங்கன், கோவா, குஜராத் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும்.
கடற்கரைக்கு செல்ல வேண்டாம்
மகாராஷ்டிரா, கிழக்கு ராஜஸ்தானில் மிக அதிக கனமழை பெய்யும். காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.