ரிலையன்ஸ் ஜியோவின் சூப்பர் தீபாவளி ஆஃபர்.. கூடவே வெளியிட்ட அறிவிப்பு தான் ஹைலைட்டே!
மும்பை: ஜியோ நிறுவனம் தீபாவளி ஆஃபர் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 1500 ரூபாய்க்கு விற்கப்படும் ஜியோ போனை தீபாவளி சலுகையாக ரூ. 699க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம் தேதி கொண்டாப்படுகிறது. வட மாநிலங்களில் அக்டோபர் 26 தொடங்கி 27 , 28 என தொடர்ந்து ஐந்து நாள் வரை தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைககளை பல்வேறு துறை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இதேபோல் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளிப்பது வழக்கம்.
சலுகை விலையில் போன்
அந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ஜியோ போனை விற்பதாக அறிவித்துள்ளது.
2ஜி போனை விட குறைவு
இது தொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ரூ.1500 மதிப்புள்ள 4ஜி சேவை உடைய ஜியோ போன் ரூ.699க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை சந்தையில் உள்ள 2 ஜி அம்ச தொலைப்பேசிகளை விட மிகக்குறைவு. எனவே 2ஜி போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை 4ஜி அம்சங்கள் நிறைந்த தொலைப்பேசி சேவைபை பயன்படுத்துவதில் உள்ள தடைகள் இப்போது நீக்கப்பட்டுள்ளது.
போன் வாங்கினால் சலுகை
தீபாவளி 2019 சலுகையின் கீழ் ஜியோ போன் வாங்குபவர்களுக்கு ரூ.700 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் முதல் 7 ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக ரூ.99 மதிப்புள்ள டேட்டா பலன்கள் கிடைக்கும்.
மோடியின் டிஜிட்டல் இந்தியா
எந்தவொரு இந்தியனும் மலிவான இணைய வசதி மற்றும் டிஜிட்டல் புரட்சியின் பலன்களை இழக்காமல் இருப்பதை ஜியோ உறுதி செய்யும். ‘ஜியோபோன் தீபாவளி பரிசு' வழங்குவதன் மூலம், பொருளாதாரத்தில் அடித்தட்டில் உள்ள ஒவ்வொருவரையும் இணைய பொருளாதாரத்திற்கு கொண்டு வருவதற்காக ரூ .1,500 முதலீடு செய்கிறோம். இது நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றிக்கான எங்கள் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.