மும்பையிலும் கூவத்தூர் பார்முலா.. பாஜகவை அலறவிடும் சிவசேனா.. நட்சத்திர ஓட்டலில் எம்எல்ஏக்கள்
Recommended Video
மும்பை: பாஜக உடனான அதிகார மோதலால் தங்கள் எம்எல்ஏக்ளை காப்பாற்ற அவர்களை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்துள்ளது சிவசேனா.
மகாராஷ்டிராவில் ஆட்சியைமைக்க பாஜகவுக்கு 24 மணி நேரம் மட்டுமே கெடு உள்ளது. முதல்வர் தேவந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பதவி காலம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் ஆட்சியமைக்க தீவிரமான வேலைகளில் பாஜக இறங்கி உள்ளது.
ஒருபுறம் சிவசேனாவை சமாதானப்படுத்த ஆர்எஸ்எஸ் உதவியை பாஜக நாடியுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்களை திரட்டவும் முயன்று வருகிறது. இப்படி ஒரு சூழலில் பாஜகவினர் இன்று அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்து பேசினர். ஆனால் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை.
24 மணி நேரம் மட்டுமே கெடு.. திடீரென நாக்பூர் விரைந்தார் கட்கரி.. மகாராஷ்டிராவில் பரபரப்பு
முதல்வர் பதவி
மகாராஷ்டிராவில் 105 இடங்களை மட்டுமே பெற்றுள்ள பாஜக ஆட்சியமைக்க வேண்டும் எனில் 56 இடங்களில் வென்றுள்ள சிவசேனாவின் ஆதரவு நிச்சயம் தேவை. ஆனால் தாங்கள் ஆதரவு தர வேண்டும் என்றால் 50:50 பார்முலாவை அமல்படுத்த சொல்கிறது சிவசேனா கட்சி.தங்கள் கட்சியினருக்கு முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு தருவதாக இருந்தால் ஆதரவு , இல்லாவிட்டால் கிடையாது என திட்டவட்டமாக சிவசேனா கூறி உள்ளது.
எம்எல்ஏக்கள் கூட்டம்
இதனிடையே மும்பை மாதேஸ்ரீயில் சிவசேனா எம்.எல்.ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, நான் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை, ஆனால் மக்களவைத் தேர்தலின் போது முடிவு செய்யப்பட்டதை பாஜக செயல்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதல்வர் பதவியை தருவதாக இருந்தால் பாஜக என்னை அழைக்கலாம். இல்லையென்றால் எதற்கும் அழைக்கக்கூடாது என்றார்.
சிவசேனா கேள்வி
இதனிடையே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பாஜக, இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. தங்களுக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக சொன்ன பாஜக, ஏன் எம்.எல்.ஏ-க்கள் பட்டியலை ஆளுநரிடம் சமர்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக விளக்கம்
இதனிடையே ஆளுரை சந்தித்து குறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர், சந்திரகாந்த் பாட்டில் கூறுகையில், "பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றது. அதன் அடிப்படையில் ஆட்சியமைய வேண்டும். இது குறித்து ஆளுநரிடம் பேசினோம். தற்போது உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து அவருடன் விவாதித்தோம்" என்றார்.
|
சிவசேனா எம்எல்ஏக்கள்
இந்நிலையில் பாஜக தங்களுக்கு 182 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த சிவசேனா தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்க முடிவு செய்தது. இதன்படி மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்துள்ளது.
நாளைக்குள் ஆட்சி
இதனால் அடுத்து என்ன செய்வது என்று பாஜக தீவிர யோசனையில் உள்ளது. பாஜக இப்போது சிவசேனா உடன் சமசரம் செய்து நாளைக்குள் ஆட்சி அமைக்கவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி சமசரம் செய்வார்கள் என்று இரு தரப்பும் (பாஜக -சிவசேனா எம்எல்ஏக்கள்) நம்பிக்கையுடன் உள்ளார்கள்.