மும்பையில் அதிகரிக்கும் தொற்று...புறநகர் மின்சார ரயிலே காரணம் ...ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட் பாருங்க!
மும்பை: மும்பையில் கொரோனா மீண்டும் தொடர் அதிகரிப்புக்கு மின்சார ரயில் இயக்கமே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
பிப்ரவரி 1-ம் தேதி வரை மும்பையில் தினசரி பாதிப்புகள் 400-க்கு கீழ் இருந்தன. 20-ம் தேதிக்குள் மும்பையில் 897 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
பிப்ரவரி 1-ம் தேதி முதல் பொதுமக்கள் அனைவரும் ரயில்களின் பயணம் செய்யலாம் என சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்பிறகுதான் மும்பையில் தொற்று அதிகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் ஓயாத ஆட்டம்
உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா தாக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.இதனால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது.
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் பாதிப்பு
.அதுவும் மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளன. 3 மாதங்களுக்கு பிறகு அங்கு 6,000-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் நாக்பூர், விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. விதிமுறைகளை மீறும் கட்டிடங்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகமாகும் பகுதியில் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்க மகாராஷ்ரா அரசு முடிவு செய்துள்ளது.
மின்சார ரயில்தான் காரணமா?
நாட்டின் வர்த்த தலைநகராகவும், இந்தியாவின் பெரிய நகராகவும் உள்ள மும்பையில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி வரை மும்பையில் தினசரி பாதிப்புகள் 400-க்கு கீழ் இருந்தன. பிப்ரவரி முதல் வாரத்தின் முடிவில் இந்த எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது. பிப்ரவரி 13-க்குள் தினசரி பாதிப்புகள் 599 ஆக உயர்ந்தது. அதன்பிறகு 20-ம் தேதிக்குள் மும்பையில் 897 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மும்பையில் கொரோனா மீண்டும் தொடர் அதிகரிப்புக்கு மின்சார ரயில் இயக்கமே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
மும்பை மக்களின் உயிர்நாடி
ஏனெனில் ஜனவரி 31-ம் தேதி வரை மும்பையில் மின்சார புறநகர் ரயில்களில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். பிப்ரவரி 1-ம் தேதி முதல் பொதுமக்கள் அனைவரும் ரயில்களின் பயணம் செய்யலாம் என சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்பிறகுதான் மும்பையில் தொற்று அதிகமாகி உள்ளது. மின்சார புறநகர் ரயில் போக்குவரத்து மும்பை மக்களின் உயிர்நாடி ஆகும். இந்த ரயில்களில் தினமும் சுமார் 50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் சொல்வது என்ன?
இது தொடர்பாக நகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல் கூறுகையில், புறநகர் ரயில் போக்குவரத்து காரணமாக கொரோனா பாதிப்புகள் அதிகமாகி உள்ளதா? என்பது குறித்து இன்னும் சில வாரங்களில் தெரியவரும் என்றார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயணிகளிடம் சோதனை, பெட்டிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.