லவ் ஜிகாத்.. கட்டாய மதமாற்றம்..ஆர்எஸ்எஸ் பேரணி - எதிர்ப்பு கோஷத்தால் பதற்றமான மும்பை
மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான கோஷங்கள் எழுப்பபட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.
மும்பை: பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் லவ் ஜிகாத்துக்கு எதிராக ஆர்எஸ்எஸ் உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மும்பையில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியின் போது லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பதற்றமான சூழல் காணப்பட்டது.
லவ் ஜிகாத்துக்கு எதிராகவும், கட்டாய மத மாற்றத்திற்கு எதிராகவும் சட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
ஸ்கூல் லவ்.. வயக்காட்டிற்குள் கூட்டிப் போய்.. ச்சை.. வேறு வழக்கை விசாரிக்க போன போலீசுக்கு ஷாக்!
பாஜகவும் லவ் ஜிகாத்தும்..
இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு தங்கள் காதல் வலையில் விழ வைத்து, அவர்களை மதமாற்றம் செய்வதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு அவர்கள் 'லவ் ஜிகாத்' என பெயரும் வைத்துள்ளனர். இதனிடையே, கேரளா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக சில இளைஞர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
உதாரணமாக, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்து தர்மத்தையும், சனாதனத்தையும் அழிக்கவே லவ் ஜிகாத் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் சதி செய்கின்றன என்றும், தீவிரவாதம் தற்போது லவ் ஜிகாத் என்ற பெயரில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறது எனவும் தெரிவித்தார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மும்பையில் பேரணி
இந்நிலையில், தற்போது சமீபகாலமாக மகாராஷ்டிராவிலும் லவ் ஜிகாத் தொடர்பான பேச்சுகள் அதிகரித்துள்ளன. பாஜகவும், சிவசேனாவும் (ஷிண்டே அணி) கூட்டணி ஆட்சியில் உள்ள மகாராஷ்டிராவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுவும், லவ் ஜிகாத் தொடர்பான பேச்சுகள் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், மும்பையில் நேற்று லவ் ஜிகாத்துக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
கோஷத்தால் பதற்றம்
ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். சுமார் 4 கி.மீ. தூரம் வரை இந்தப் பேரணி சென்றது. லவ் ஜிகாத், கட்டாய மதமாற்றம், மதத்தின் பெயரில் நடைபெறுவதாக கூறப்படும் நில அபகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக சட்டங்களை இயற்ற வேண்டும் என இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான கோஷங்கள் எழுப்பபட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. அசம்பாவிதங்களை தடுக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பாஜக எம்எல்ஏக்கள், ஷிண்டே அணி சிவசேனா எம்எல்ஏக்கள் சிலரும் இந்த பேரணியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.