கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘கிரிக்கெட் கடவுள்’
மும்பை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமணிந்து சென்று இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ வைரலாகியுள்ளது.
இயேசு பிரான் அவதரித்த தினமான டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா என அழைக்கப்படும் சாண்டோகிளாஸ் வேடமணிந்து, குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகளையும், பரிசுகளையும் வழங்குவது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது.
அந்தவகையில், கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமணிந்து அஷ்ராய் குழந்தைகள் நல மையத்திற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.
டிவிட்டரில் வீடியோ:
இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். சுமார் ஒன்றரை நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அக்குழந்தைகளைச் சந்திக்க குதூகலமாகப் புறப்படுகிறார் சச்சின்.
பரிசுகள்:
பின்னர் கையில் பேட் மற்றும் பந்துகளுடன் இல்லத்தின் உள்ளே செல்லும் சச்சின், அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். நடனம் ஆடுகிறார். இறுதியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பேட், டென்னிஸ் பேட் மற்றும் பந்துக்களை பரிசாக அளிக்கிறார்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து:
வீடியோவின் இறுதியில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார் சச்சின். இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
|
வைரல்:
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு பிரபலங்களும் இது போன்று விழாக்களின் போது ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களைச் சந்தித்தால், அவர்களும் மகிழ்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடுவர் என இந்த வீடியோவைப் பார்த்தோர் கருத்து தெரிவித்துள்ளனர்.