உரிய அனுமதி இல்லாத... பதஞ்சலியின் கொரோனில் மருந்திற்கு அனுமதியில்லை... மகாராஷ்டிர அரசு உத்தரவு
மும்பை: முறையான சான்றிதழ் இல்லாத பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்தின் விற்பனையை அனுமதிக்க முடியாது என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.
யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ்வுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம், கடந்தாண்டு ஜூன் மாதம் 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. கொரோனா வைரஸ் குணப்படுத்த அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு மருந்து என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.
அந்தச் சமயத்தில் பைசர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பூசிகளும்கூட சோதனை நிலையிலேயே இருந்தது. இதன் காரணமாக கொரோனில் மருந்து மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இருப்பினும், அறிவியல் ஆதாரங்கள் எதையும் பதஞ்சலி நிறுவனம் ஆயுஷ் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவில்லை. இதனால் பின்னர் அது உடம்பிற்குச் சக்தியை தரும் பூஸ்டர் மருந்து என விளக்கம் தரப்பட்டது.
'கொரோனில் கிட்'
நாட்டில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பதஞ்சலி நிறுவனம் 'கொரோனில் கிட்' என்ற பெயரில் மற்றொரு மருந்தை அறிமுகம் செய்தது. இது கொரோனானில் மருந்தின் மேம்படுத்தப்பட்ட மாதிரி என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்தது. இந்த மருந்தை வெளியிடும் விழாவில் யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ், மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உலக சுகாதார அமைப்பு மறுப்பு
உலக சுகாதார அமைப்பின் தர சான்றிதழ் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் கொரோனில் கிட்டிற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளதாகவும் பதஞ்சலி தெரிவித்தது. மேலும், சிலர் உலக சுகாதார அமைப்பு இந்த கொரோனில் மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால், கொரோனா சிகிச்சைக்கு எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ ஒப்புதல் அளிக்கவோ இல்லை என்று இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
அமைச்சர் ட்வீட்
இந்நிலையில், முறையான சான்றிதழ் இல்லாத பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்தின் விற்பனையை அனுமதிக்க முடியாது என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா எதிராக பாதுகாப்பு அளிக்கும் என சான்றளிக்கப்பட்டதாகப் பதஞ்சலி கூறுவதை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.
அனுமதியில்லை
இது தொடர்பாக இந்திய மருத்து சங்கமும் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்து கழகம் போன்ற சுகாதார அமைப்புகளிடம் இருந்து முறையான சான்றிதழ் இல்லாமல் கொரோனில் மருந்தின் விற்பனை மகாராஷ்டிராவில் அனுமதிக்க முடியாது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஐஎம்ஏ கேள்வி
கொரோனில் மருந்து தொடர்பாகச் சுகாதார துறை அமைச்சகம் விளக்கம் தர வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும், கொரோனில் மருந்து கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்றால், பின் ரூ. 35 ஆயிரம் கோடி செலவில் அரசு எதற்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்கிறது? என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.