தலைமை மீது தொடர் விமர்சனம் - கலகக் குரல் சஞ்சய் ஜா காங்கிரஸில் இருந்து அதிரடி சஸ்பெண்ட்!
மும்பை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா அக்கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை ஓராண்டாக நியமிக்கவும் இல்லை.
இந்த கால கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ். தற்போது ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா கலகக் குரல் எழுப்பிய பாணியில் ராஜஸ்தானில் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார். இதனால் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் உள்ளது.
உண்மையை ஒரு நாளும் வீழ்த்த முடியாது: ட்விட்டரில் சச்சின் பைலட் பதிவு!!
இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களான 2 அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.
இந்த பின்னணியில் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து பத்திரிகை ஒன்றில் அதன் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கட்டுரை எழுதி இருந்தார். இதனால் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனாலும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து சஞ்சய் ஜா விமர்சித்து வந்தார். மேலும் சச்சின் பைலட்டை புகழ்ந்து சமூக வலைதளங்களில் சஞ்சய் ஜா பதிவிட்டார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.