மகாராஷ்டிரா:உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன்னரே கவிழ்ந்தது பாஜக அரசு!
Recommended Video
மும்பை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன்னரே பாஜக அரசு கவிழ்ந்தது.
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு என்சிபி, சுயேட்சைகள் உட்பட 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி பட்னாவிஸுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக என்சிபியின் அஜித் பவாருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் 2 நாட்களாக விசாரித்தது.
துஷார் மேத்தா வாதம்
இந்த விசாரணையின் போது, 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததாலேயே ஆளுநர் பதவி ஏற்க அழைப்பு விடுத்தார் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிஸுக்கு 14 நாட்கள், ஆளுநர் அவகாசம் கொடுத்திருக்கிறார் என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.
என்சிபி தரப்பு மறுப்பு
ஆனால் என்சிபியின் 54 எம்.எல்.ஏக்கள், பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தரவில்லை என அபிஷேசிங் சிங்வி வாதத்தை முன்வைத்தார். மேலும் சட்டசபையில் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கபில் சிபல் வாதிட்டார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் அனைத்தும் நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் அளித்த தீர்ப்பில், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வசதியாக தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும்; மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தலைகீழான நிலவரம்
அத்துடன் இந்த வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வந்த சில மணிநேரங்களிலேயே மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தலைகீழானது.
ராஜினாமாக்களால் அரசு கவிழ்ந்தது
தங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் முதலில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் பட்னாவிஸும் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மகாராஷ்டிராவில் பாஜகவின் 3 நாட்கள் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படவில்லை.