வந்தே பாரத் விமானங்களில்.. ஜூன் 6 முதல் நடு சீட்டை காலியாக விடவேண்டும்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மும்பை: ஏர் இந்தியா விமானங்களில் நடு சீட்டை காலியாக விட உத்தரவிட வேண்டும் என்று விமானி ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜூன் 6ம் தேதி வரை தற்போதையை நிலை தொடரட்டும் என்றும் அதன் பிறகு நடு இருக்கையை காலியாக விட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தற்போது பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது. ஆனால் இதில் அழைத்து வரப்படும் பயணிகளுக்கு கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக நடு இருக்கையிலும் பயணிகள் அமர வைத்து அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த நிலையில் இதை எதிர்த்து ஏர் இந்தியா விமானி தேவன் யோகேஷ் கனானி என்பவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் விதிமுறைகளை ஏர் இந்தியா நிறுவனம் கடைப்பிடிப்பதில்லை. நடு சீட்டை காலியாக விட வேண்டும். இதற்கான உத்தரவை மார்ச் 23ம் தேதி சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் பிறப்பித்திருந்தார். ஆனால் அதை பின்பற்றுவதில்லை என்று முறையிட்டிருந்தார்.
ஆனால் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்த ஏர் இந்தியா நிறுவனம், இந்த உத்தரவை அடுத்து மத்திய அரசு பிறப்பித்த புதிய உத்தரவுகள் தற்போது அமல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. இதை ஏற்ற உயர்நீதிமன்றம் நடு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகினார் கனானி.
இந்த வழக்கு இன்று அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணையின் இறுதியில், சர்வதேச நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கும்போது நடு சீட்டை காலியாக விட வேண்டும். மக்களின் உயிர்தான் முக்கியம். விமான நிறுவனத்தின் நலன் இப்போது கருத்தில் கொள்ளப்படக் கூடாது. சமூக இடைவெளி மிகவும் முக்கியமானது. சமூக இடைவெளி வேண்டும் என்று சொல்வது காமன் சென்ஸ். அதை நிராகரிக்க முடியாது.
இருப்பினும் தற்போது முன்பதிவு முடிந்து விட்டதால் ஜூன் 6ம் தேதி வரை தற்போதைய நிலை தொடரட்டும். ஆனால் ஜூன் 6ம் தேதிக்குப் பிறகு நடு சீட் கட்டாயம் காலியாக விடப்பட்டிருக்க வேண்டும். அரசு மக்களின் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். விமான நிறுவனத்தின் லாப நஷ்டம் குறித்து இப்போது பார்க்கக் கூடாது.
சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள்.. வரும் விமானங்கள்.. நேர அட்டவணை.. முழு லிஸ்ட்
வெளியில் மக்களுக்கு இடையே 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு சொல்கிறது. ஆனால் விமானத்துக்குள் இடைவெளி கடைப்பிடிக்காவிட்டால் எப்படி என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மே 7ம் தேதி முதல் வந்தே பாரத் விமான சேவையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்த விமான சேவை மூலம் ஏர் இந்தியா இந்தியாவுக்கு அழைத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.