பங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே!
Recommended Video
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமையான இன்று இறங்குமுகத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண், சென்செக்ஸ் 642.22 புள்ளிகளை இழந்து 36,481.09ல் முடிவடைந்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 185.90 புள்ளிகள் சரிந்து 10,817.60 என்ற அளவில் முடிவடைந்தது.
உலகளாவிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் ரூபாய் பலவீனமடைந்து வருவதால் இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள அரம்கோ எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலையை அது பாதித்துள்ளது, மேலும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் மீதும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை தொடர் சரிவை சந்தித்தது.
டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஆக்சிஸ் வங்கி ஆகியவை சென்செக்ஸில் மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்தன, இவற்றின் பங்குகள் 6% வரை விலை குறைந்தன. எச்.யூ.எல், ஏஷியன் பெயிண்ட்ஸ் மற்றும் இன்போசிஸ் மட்டுமே ஓரளவுக்கு ஆதாயம் பெற்றன.
துறைரீதியிலாக பார்த்தால், ஏறத்தாழ அனைத்து துறைகளும் இறங்குமுகமாகத்தான் இருந்துள்ளன. வங்கிகள், ஆட்டோ மொபைல், மின்சாரம், இன்ஃப்ரா, மெட்டல், எஃப்எம்சிஜி, ஐடி மற்றும் பார்மா ஆகியவை இதில் அடங்கும்.
இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்திலேயே பங்குச் சந்தை இறங்குமுகத்தில்தான் இருந்தது. சென்செக்ஸ் 112.62 புள்ளிகள் அல்லது 0.30 சதவீதம் குறைந்து 37,010.69 க்கு துவங்கியது. நிஃப்டி 32.30 புள்ளிகள் அல்லது 0.29 சதவீதம் சரிந்தது.
இப்போதே இப்படி என்றால் கச்சா எண்ணை விலை உயர ஆரம்பிக்கும்போது நிலைமை இன்னும் மோசமாகலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.