16 மாதங்களில் இல்லாத சரிவு.. பாதாளத்தில் சென்செக்ஸ்.. ரூ.6.50 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
மும்பை: பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சி காரணமாக, முதலீட்டாளர்களின் ரூ.6.50 லட்சம் கோடி அளவுக்கான முதலீடுகள் ஸ்வாகா செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையின் அடிப்படையில் உலகளாவிய அளவில் முதலீட்டாளர்களிடம் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தளவில், இந்த பீதியோடு, யெஸ் வங்கியின் சிக்கலும் சேர்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறது. இது பங்குச் சந்தையில் எதிரொலிக்கிறது.
வங்கி பங்குகள்
இந்த நிலையில்தான், மும்பை பங்குச் சந்தை, சென்செக்ஸ், இன்று காலை, கிட்டத்தட்ட 1,200 புள்ளிகள் அளவுக்கு சரிவுடன் வர்த்தகத்தை துவக்கியது. யெஸ் வங்கி நெருக்கடி முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டதாக சந்தை நிபுணர்கள் கணித்தனர். வங்கி பங்குகள் அனைத்தும் பலத்த அடி வாங்கியதை இதற்கு உதாரணமாக கூறினர்.
ஆரம்பமே சறுக்கல்
சென்செக்ஸ் 1188 புள்ளிகள் சரிந்து 36,388.28 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி கிட்டத்தட்ட 3% சரிந்து 10,675 புள்ளிகளாகவும் இருந்தது. இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பும் கடுமையாக சரிந்தது. ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று மேலும் சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74.0087 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
கச்சா எண்ணை
ஆசிய பங்குச் சந்தைகள் இன்றும் சரிவுடன் காணப்பட்டன. ஜப்பானின் நிக்கி 6% க்கும் மேலாக சரிவடைந்தது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பீதி இதற்கு காரணம். கச்சா எண்ணெய் விலைகள் இன்று 30% க்கும் மேலாக வீழ்ச்சியடைந்தன. இதற்கும் கொரோனா வைரஸ் பயம்தான் காரணம்.
கோடிகள்
இதனிடையே, மதியம் சுமார் 1.30 மணியளவில், சென்செக்ஸ் மேலும் அதலபாதாளத்திற்கு சரிவடைந்தது. சென்செக்ஸ் 2,200 புள்ளிகளுக்கு மேல் குறைந்து 35,337.66 புள்ளிகளில் வணிகம் நடைபெற்றது. நிஃப்டி 500 புள்ளிகளுக்கும் மேல் சரிவடைந்து, 10,363 புள்ளிகளாக இருந்தது. இது 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவாகும். முதலீட்டாளர்களின் 6.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கான முதலீடுகள் இந்த மாபெரும் சரிவால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நிறுவனங்கள்
ஓ.என்.ஜி.சி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் முறையே 13 சதவீதம் மற்றும் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. இண்டஸ்இண்ட் பேங்க், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்றவற்றின் பங்குகள் 6-9 சதவீதம் வரை சரிந்தன. கச்சா எண்ணை விலை 30 சதவீதம் அளவுக்கு குறைந்ததும், பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.