17 வருடம் காணாத சரிவு.. இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ..
Recommended Video
மும்பை: தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. 17 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஜூலை மாத காலத்தில் இப்படி ஒரு பெரும் சரிவை பங்குச் சந்தைகள் இன்று சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீதான வரி, மந்தமான பொருளாதாரம் மற்றும் வீழ்ச்சியடைந்துள்ள நுகர்வு ஆகியவையும், இப்படி பங்குச் சந்தை வீழ்ச்சியடைய காரணங்களாக சொல்லப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டி வியாழக்கிழமையான இன்று 11,000 புள்ளிகளை விடக் குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூன் 3ம் தேதி 52 வாரத்தில் முதல் முறையாக 12,103.05 என்ற அளவுக்கு நிப்டி புள்ளிகள் அதிகரித்திருந்தன. அதன்பிறகு இன்று இப்படி ஒரு வீழ்ச்சியை நிப்டி சந்தித்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 37,000 புள்ளிகளுக்கும் குறைவாக வீழ்ந்தது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ்.
இன்று மட்டும் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
புதன்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக 68.79 என்ற அளவில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 69.20 ஆக சரிந்தது. இது மற்றொரு மோசமான பொருளாதார அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ் பங்குகளில், வேதாந்தா மற்றும் எஸ்பிஐ கிட்டத்தட்ட 6% சரிவை சந்தித்தன. எச்.டி.எஃப்.சி, எச்.டி.எஃப்.சி வங்கி, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாடா ஸ்டீல் மற்றும் எஸ் வங்கி ஆகியவையும் இன்று அதிகப்படியான சரிவை சந்தித்த நிறுவனங்கள் ஆகும்.
இருப்பினும் பின்னர் ஓரளவுக்கு பங்கு விலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 37,018.32 புள்ளிகளுடன் இருந்தது. 462.80 புள்ளிகள் சரிவாகும்.