இந்திய பங்குச் சந்தையில் ரத்த களறி.. ரூ.2.2 லட்சம் கோடி முதலீடுகள் ஸ்வாகா!
மும்பை: பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் சரிவால் முதலீட்டாளர்கள் ரூ.2.2 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
பங்குச் சந்தையில் இன்று ரத்த களறியே நடந்து முடிந்தது. கடும் வீழ்ச்சியடைந்த தேசிய பங்குச் சந்தை நிஃப்டி மற்றும் மும்பை பங்குச் சந்தையால், முதலீட்டாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இறுதியில் சென்செக்ஸ் 690 புள்ளிகள் சரிவடைந்து, 35,742 என்ற அளவில் இருந்தது. இது 1.89 சதவீத வீழ்ச்சியாகும். அதேநேரம், நிஃப்டி 198 புள்ளிகள் குறைந்து, 10,754 என்ற அளவில் இருந்தது. இது, 1.81 சதவீத வீழ்ச்சியாகும்.
ஐடி பங்குகள்
ஐடி பங்குகள்தான் 2.62 சதவீதம் என்ற அளவில் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. இதையடுத்து டெக் (2.60 சதவீதம் சரிவு), ஆட்டோ 2.12 சதவீதம், டெலிகாம் 2.05 சதவீதம் சரிவடைந்தன. நுகர்வோர் பொருட்கள் 2.04 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. எச்சல் மியூச்சுவல் பண்ட் அதிகாரி வைரல் பேராவாலா இதுபற்றி கூறுகையிில், கடந்த சில நாட்களாக உலக அளவில் பங்குகள் வீழ்ச்சியடைந்தபோதிலும், இந்திய பங்குச் சந்தைகள் தாங்கிப்பிடித்தன. இறுதியாக, இன்று வீழ்ச்சியடைந்துள்ளன. உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சியின் தாக்கம்தான் இது. அமெரிக்கா-சீனா நடுவேயான வர்த்தக போரும் மற்றொரு காரணம்" என்றார்.
அமெரிக்காவில் கரடி ஆதிக்கம்
பொருளாதார மந்தநிலை குறித்தான கவலைகள் காரணமாக, அமெரிக்க பங்குச் சந்தை 2 மாதங்களாகவே 'கரடி' ஆதிக்கத்தில்தான் உள்ளது. இது பிற நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் பங்குச் சந்தை ஆய்வாளர்கள்.
சான்டா பரிசு
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த சில பங்குகள், அதாவது அதன் தகுதிக்கும் மேலாகவே ஏறுமுகத்தில் இருந்த பங்குகள், இன்று திருப்பியடித்துள்ளன என்பதுதான் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம். எனவேதான் கிண்டலாக, "கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு காலம் முடிந்துவிட்டது. இது ரத்த ஆறு ஓடும் காலம்" என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்.
விவசாய கடன்
ரூபாய் மதிப்பு 56 பைசாக்கள் சரிவடைந்ததும், பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணை விலை 5 சதவீதம் குறைந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள். சில மாநிலங்கள் விவசாய கடன் தள்ளுபடி அறிவித்துள்ளதால், பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பகிக்கை முதலீட்டாளர்களிடம் குறைந்துள்ளதும் பங்குச் சந்தை களேபரத்தின் மற்றொரு காரணம்.