வாங்க அண்ணே... மு.க.ஸ்டாலினை வாஞ்சையோடு வரவேற்ற சுப்ரியா சுலே
Recommended Video
மும்பை: மஹாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற நிலையில், அந்த விழாவில் கலந்துகொள்ளச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சுலே வாஞ்சையோடு வரவேற்று அமரவைத்தார்.
மு.க.ஸ்டாலினை பார்த்ததும், வாங்க அண்ணே, என தனது அன்பை வெளிப்படுத்திய சுப்ரியா சுலே எம்.பி. அவரிடம் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
மு.க.ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுனே கார்கே போன்றோர் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர்.
பதவியேற்பு விழா
மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சிவாஜி பூங்காவில் பதவியேற்றுக்கொண்டார். அந்த பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே வரவேற்று மேடையில் அமரவைத்தனர்.
கனிமொழி தோழி
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவும், கனிமொழியும் நல்ல தோழிகள். அவர்கள் இருவரும் பல்வேறு விவகாரங்களை மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களுடைய நட்பு இருக்கிறது. இதனால் மு.க.ஸ்டாலினை பார்த்ததும், வாங்க அண்ணே என வாஞ்சையோடு வரவேற்றார் சுப்ரியா சுலே.
திட்டத்தில் மாற்றம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல் ஆ.ராசா செல்வதாக இருந்ததாம், பின்னர் திடீரென்று அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு டி.ஆர்.பாலு செல்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் இருந்து மும்பைக்கு முன்கூட்டியே சென்ற டி.ஆர்.பாலு விமான நிலையத்திற்கு சென்று ஸ்டாலினை அழைத்துச் சென்றார்.
நலம் விசாரிப்பு
மு.க.ஸ்டாலின் அருகில் அமர்ந்த தேசியவாத காங்கிரஸ் முன்னணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரஃபுல் படேல் தமிழக அரசியல் நிலவரம் பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம் பற்றி கேட்டறிந்துள்ளார்.