காங்கிரஸ் தலைவர் சோனியாவை எப்போது சந்திப்பார் சரத்பவார்
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எப்போது சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 105 இடங்களை பெற்றுள்ள பாஜக தனது பங்காளியான சிவசேனா கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பியது. ஆனால் 56இடங்களை வென்றுள்ள சிவசேனா முதல்வர் பதவி அளித்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறது.
இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்களை பாஜக பெற முடியாத நிலையில் உள்ளது. இதனால் ஆட்சியமைக்க விரும்பவில்லை என பாஜக அறிவித்துள்ளது. இதனால் சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று ஆட்சியமைக்க வேண்டும் என்றால் சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு அளித்தால் மட்டுமே சாத்தியம் ஆகும். சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் அந்த கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்தது. இதை ஏற்று சிவசேனா பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை சந்திக்கவில்லை. இந்நிலையில் இருகட்சிகளும் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எடுக்கும் முடிவே யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை தீர்மானிக்க உள்ளது.