என்னது பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா?.. சரத் பவார் கடும் எதிர்ப்பு
மும்பை: மத்தியில் ஆளும் பாஜகவை பல்வேறு மாநிலக் கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில் பிரதமர் வேட்பாளாராக ராகுலுக்கு பதிலாக மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் வர வாய்ப்பு உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த சரத்பவார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதால் அடுத்தப் பிரதமர் ஆகும் வாய்ப்பு சந்திரபாபு நாயுடு, மாயாவதி, மற்றும் மம்தா பேனர்ஜி ஆகியோருக்கே உள்ளதாக தெரிவித்துள்ளார். குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் பிரதமராக வந்தார் என்று கூறும் சரத்பவார் அடுத்து வரும் தேர்தலிலும் முதல்வராக இருப்பவர் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
அதே வேளையில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த சரத்பவார் ராகுலை விட இவர்கள் மூவருக்குத்தான் பிரதமராகும் அதிக தகுதி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சரத்பவாரின் இந்த கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது ராகுலே பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்பதை பலமுறை தெளிவு படுத்தியுள்ளார் ஆகவே இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறினார். ஆக ராகுல் பிரதமராக வருவதை அவர் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. சரத்பவார் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்தபோதும் இப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்ததால்தான் அவர் அப்போது காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.
கிரண் பேடி கொட்டத்தை அடக்க வந்த தீர்ப்பு.. வென்றது ஜனநாயகம்.. நாராயணசாமி செம ஜாலி!
அப்போது காங்கிரஸ் கட்சி மிக பலவீனமாக இருந்தது. ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வலிமையான தலைவர் வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்பினர். அவர்களில் பெரும்பாலானோர் சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று விரும்பினர். இதை ஏற்றுக்கொண்ட சோனியாவும் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். அப்போது சரத்பவார் சோனியாகாந்தி வெளிநாட்டை சேர்ந்தவர் என்று கூறி அந்த கட்சியில் இருந்து பி.எ. சங்மா உள்ளிட்டோரோடு இணைந்து வெளியேறினார்.
அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை துவங்கினார். பின்னர் இதே சரத்பவார் மகாராஸ்டிரா மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். அதன் பின்னர் மீண்டும் பாஜகவை ஆதரித்ததால் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இப்போது பாஜகவை எதிர்க்கும் கட்சிகளில் சில காங்கிரசோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. சில கட்சிகள் காங்கிரசோடு கூட்டணி சேரவில்லை. இந்த நிலையில் பாஜக எதிர்கட்சிகளுக்கு யார் பிரதமர் வேட்பாளர் என்றே தெரியாத நிலையில் தேர்தலை சந்திக்கின்றனர் என்று விமர்சித்து வருகிறது. ஆனால் திமுக உள்ளிட்ட சில கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறிவருகிறார்கள். இப்படி மாறுபட்ட கருத்துகள் இருக்கும் சூழலில் சரத்பவார் இப்படி கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி ராகுல்தான் பிரதமர் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மகராஷ்டிர மாநில மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது. அடுத்து ராகுல் தலைமையில்தான் ஆட்சி அமையவுள்ளது. காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று சரத்பவாருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆக அம்மா (சோனியா) காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கலக குரல் எழுப்பிய சரத்பவார் இப்போது மகன் (ராகுல்) காலத்தில் கட்சிக்கு வெளியே இருந்து கலகம் புரிய ஆரம்பித்துள்ளார்