வழிபாட்டு தல திறப்பு:உத்தவ் தாக்கரேவுடன் மல்லுக்கட்டும் ஆளுநர் கோஷ்யாரி- பிரதமரிடம் சரத்பவார் புகார்
மும்பை: மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்து வரும் ஆளுநர் கோஷ்யாரி மீது பிரதமர் மோடியிடம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புகார் தெரிவித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் தளர்த்தப்பட்டதைப் போல மகாராஷ்டிராவிலும் தளர்த்தப்பட்டது. இருப்பினும் வழிபாட்டு தலங்கள் திறப்பு தொடர்பாக அம்மாநில அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
14 மாத சிறைவாசம்... மெகபூபா முப்தி விடுதலை- ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!
ஆளுநர் கோஷ்யாரி கடிதம்
இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை ஆளுநர் கோஷ்யாரி அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தில், லாக்டவுன் கட்டுப்பாடு தளர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கடவுளிடம் ஏதும் உத்தரவு பெறுகிறீர்களா? நீங்கள் என்ன மதச்சார்பற்றவராக மாறிவிட்டீர்களா? என்றெல்லாம் கேட்டிருந்தார் ஆளுநர் கோஷ்யாரி.
உத்தவ் தாக்கரே பதிலடி
ஆளுநர் கோஷ்யாரின் இந்த கடிதம் மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆளுநருக்கு உத்தவ் தாக்கரேவும் ஒரு பதில் கடிதம் அனுப்பினார். அதில், உங்களிடம் இருந்து எல்லாம் இந்துத்துவா சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றெல்லாம் ஒருவர் விமர்சிக்கிறார்.
இந்துத்துவா என்பது இதுவா?
அப்படி விமர்சித்த நபருக்கு விருந்து அளிக்கின்றீர்கள் நீங்கள். அது ஒன்றும் இந்துத்துவா சித்தாந்தமும் அல்ல. அப்படியானால் நீங்கள் என்ன மதச்சார்பற்றவரா? என பதிலடி கொடுத்திருந்தார் உத்தவ் தாக்கரே. ஆளுநர் கோஷ்யாரியின் இந்த அக்கப்போர் வார்த்தைகள் அனலை கிளப்பி இருக்கின்றன.
மோடிக்கு பவார் கடிதம்
இதனிடையே ஆளுநர் கோஷ்யாரியின் அரசியல் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், ஆளுநர் மாளிகைக்கு என உள்ள மரியாதையை சீர்குலைத்துவிட்டார் கோஷ்யாரி. அதை தரம்தாழ்ந்ததாக மாற்றுகிறார். ஒரு அரசியல் கட்சியின் தலைவரைப் போல முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என விமர்சித்திருக்கிறார் சரத் பவார்.