2 நாளில் நல்ல செய்தி வரும்.. மகாராஷ்டிராவை வெல்வோம்.. பாஜகவுடன் இணைந்து.. உத்தவ் தாக்கரே
Recommended Video
மும்பை: 2 நாளில் எங்களது கூட்டணியை உறுதிப்படுத்துவோம். கூட்டணியாகத்தான் சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ளோம். மகாராஷ்டிராவை வெல்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ளது. இன்று தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் கூட்டணிகள் அங்கு உறுதியாகி வருகின்றன.
பாஜகவைப் பொறுத்தவரை வழக்கம் போல சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கிறது. என்னதான் மாறி மாறி திட்டிக் கொண்டாலும், கடுமையாக சாடிக் கொண்டாலும் தேர்தல் என்று வந்து விட்டாலும் இருவரும் கை கோர்த்துக் கொள்வது அங்கு வழக்கம்தான். அந்த வகையில் இப்போதும் அவர்கள் இருவரும் கரம் கோர்க்கவுள்ளனர்.
''தினகரனை தலைவராக ஏற்க முடியலை.. வெளியேறிட்டேன்''- மகிளா காங். அப்சரா ரெட்டி பேட்டி
2 நாளில் தகவல்
இதுதொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளன. இதுதொடர்பான முறைப்படியான அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் இன்னும் 2 நாளில் தெரிய வரும்.
தலா 135 கிடையாது
லோக்சபா தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட பார்முலாவை பின்பற்றுவோம். இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக ஊடகங்கள்தான் சொல்கின்றன. நாங்கள் சொல்லவில்லை என்றார் உத்தவ் தாக்கரே.
அமித்ஷா
நாளை மும்பை வருகிறார் பாஜக தலைவர் அமித்ஷா. அப்போது இடப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படவுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
288-162-126
தற்போது உள்ள நிலவரப்படி மொத்தம் உள்ள 288 சட்டசபைத் தொகுதிகளில் பாஜக 162 தொகுதிகளிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இதுகுறித்து முதல்வர் பட்னாவிஸும், உத்தவ் தாக்கரேவும்தான் கூடிப் பேசி முடிவு செய்யவுள்ளதாக இரு கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்றனர்.
வழிக்கு வந்த சிவசேனா
கடந்த 2014 சட்டசபைத் தேர்தலின்போது, கூட்டணி பேச்சுவார்த்தை சமூகமாக முடியாத காரணத்தால் இரு கட்சிகளும் கூட்டணி வைக்காமல் தனித் தனியாக சந்தித்தன. தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்சியமைத்தது. பின்னடைவைச் சந்தித்த சிவசேனா, ஒரு வருடம் கழித்து பாஜக அமைச்சரவையில் சிவசேனா இணைந்தது என்பது நினைவிருக்கலாம்.