மகாராஷ்டிரா தேர்தல்: தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... பாஜக- சிவசேனா தனித்து போட்டி?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் பாஜக, சிவசேனா இரு கட்சிகளுமே தனித்துப் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அக்டோபர் 21-ந் தேதிகள் வாக்குப் பதிவு நடைபெறும்; அக்டோபர் 24-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இம்மாநிலத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இருகட்சிகளும் தலா 125 இடங்களைப் பகிர்ந்து கொண்டு எஞ்சிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளன. பாஜகவும் சிவசேனாவும் தலா 144 இடங்களில் போட்டியிடுவது என சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது பாஜகவோ, சிவசேனாவுக்கு அதிகபட்சம் 126 இடங்கள் என்று அடம்பிடிக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் அதிக இடங்களில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது என்பதை இலக்காக கொண்டிருக்கிறது.
ஆனால் சிவசேனாவோ இதுவரையிலான சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களில் போட்டியிட்டுவிட்டு இப்போது மிக குறைவான தொகுதிகளில் போட்டியிட விரும்பவில்லை. இதனால் இரு கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தை இழுபறியாகவே நீடித்து கொண்டிருக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலிலும் இதேபோல் இழுபறி நீடித்ததால் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. தேர்தலுக்குப் பின்னர் இணைந்து கூட்டணி அரசை அமைத்தது குறிப்பிடத்தக்கது.