அமெரிக்காவில் டிரம்ப் தோற்றதைப் போல பீகாரில் பாஜக அணி தோல்வியை சந்திக்கும்- சிவசேனா
மும்பை: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியை சந்தித்தது போல பீகாரில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை எதிர்கொள்ளும் என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், பீகார் தேர்தல் ஆகியவற்றை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளதாவது:
பீகார் தேர்தல்
அமெரிக்காவில் அதிகார மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. டிரம்ப் தோல்வியை தழுவ ஜோ பிடன் வெற்றி பெற்றிருக்கிறார். அதேநேரத்தில் பீகார் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறது.
டிரம்ப் நிகழ்ச்சியால் கொரோனா பரவல்
கொரோனா பரவல் காலத்திலும் கூட நமஸ்தே டிரம்ப் என மத்திய அரசு டிரம்ப்க்கு உற்சாக வரவேற்பளித்தது. ஆனால் அமெரிக்கர்களோ தேர்தலில் பை பை டிரம்ப் என உரத்து சொல்லிவிட்டனர். குஜராத்துக்கு டொனால்ட் டிரம்ப் வருகை தந்த பின்னர் கொரோனா பரவல் அதிகரித்ததை மறுக்க முடியாது. இப்போது அமெரிக்கர்கள் தங்களை பிடித்த நோய் தொற்றான டிரம்ப்பை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர்.
பீகார் மக்கள் கையில் முடிவு
பிரதமர் மோடியும் நிதிஷ்குமாரும் இளைஞரான தேஜஸ்வி யாதவ் முன்னால் நிற்க கூட முடியாத நிலை உருவாகி உள்ளது. பீகார் தேர்தல் முடிவுகளை அந்த மாநில மக்கள் கைகளில் எடுத்திருக்கின்றனர். பிரதமர் மோடி, நிதிஷ்குமார் முன்பாக பீகார் மக்கள் மண்டியிடமாட்டார்கள்.
முதலில் வெளியேறுங்க..
பீகாரில் காட்டாட்சி நடப்பதாக பிரதமர் மோடியும் நிதிஷ்குமாரும் குற்றம்சாட்டினர். ஆனால் பீகார் மக்களோ, நீங்கள் முதலில் வெளியே போங்க.. காட்டாட்சியே வந்தாலும் எதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறுகின்றனர். இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.