இலங்கை போல.. இந்தியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை தேவை.. சிவசேனா கோரிக்கை
மும்பை: இந்தியாவில் இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என, பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், இது தொடர்பாக தலையங்க செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பர்தாவை பொது இடங்களில் அணிவதை தடை செய்ய, பிரதமர் மோடி முன்வர வேண்டும் என அந்த தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில், சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் பொது இடங்களில் பர்தா அணிவதை அந்நாட்டு அரசு தடை செய்தது.
இவ்விகாரத்தில் இலங்கையை பின்பற்றி பொது இடங்களில் பர்தா அணிவதற்கு, இந்திய அரசும் தடை விதிக்க வேண்டும் என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. முத்தலாக் மட்டுமே தடை செய்யப்பட வேண்டியது அல்ல, பர்தா அணிவதும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
ராவணனின் நாடு எனப்படும் இலங்கை அரசு பர்தாவிற்கு தடை விதித்துள்ள போது, ராமனின் நாடான இந்தியாவில் ஏன் பர்தாவிற்கு தடை விதிக்க முடியாது
கொழும்பு அருகே மனிதவெடிகுண்டுகளின் 'டிரெயினிங்' வீடியோக்களை கைப்பற்றியது ராணுவம்!
முகமூடிகள் அல்லது பர்தாக்களை அணிந்து வரும் மக்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். அவசர கால சமயங்களில் பாதுகாப்பு படையினர் பொதுமக்களை எளிதாக அடையாளம் காண பர்தாவிற்கு தடை விதிக்கப்பட்டால் உதவிகரமாக இருக்கும் என்றும் சிவசேனா கூறியுள்ளது.
சிவசேனாவின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பர்தா அணியும் அனைத்து பெண்களும் பயங்கரவாதி இல்லை. அது அவர்களின் பாரம்பரியம், அவர்களுக்கு பர்தா அணிய உரிமை உள்ளது. இந்தியாவில் பர்தா அணிவதற்கு எந்த தடையும் இருக்காது என்றார்.
இதனிடையே எப்போதும் சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்ட சாத்வி பிரக்யா, சிவசேனாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது என கூறியுள்ளார்.