ஆட்சியே போனாலும் பரவாயில்லை.. முதல்வர் பதவிதான் வேண்டும்.. நினைத்ததை சாதித்த சிவசேனா
Recommended Video
மும்பை: இறுதியாக நினைத்ததை சாதித்து விட்டது சிவசேனா கட்சி. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்கியே தீருவேன் என்று பால் தாக்கரேவிற்கு வாக்குறுதி அளித்துள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலம் கனிந்து விட்டது. ஆம், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்திக்கிறது சிவசேனா மற்றும் தோழமை கட்சி குழு.
சிவசேனா கட்சிக்கு, முதல்வர் பதவி உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் சரிபாதியாக பகிர்ந்து தர வேண்டும் என்று பாஜகவுக்கு அழைப்பு விடுத்தது. இதை பாஜக ஏற்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக, அவ்வாறு ஒரு பேச்சு வார்த்தையே நடக்கவில்லையே, என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
விளம்பரம் தேடுவோருக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியாது.. கேரள அமைச்சர் திட்டவட்டம்
குடியரசு தலைவர் ஆட்சி
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று சிவசேனா முயற்சி செய்தது. ஆளுநர் கெடு விதித்த நாட்களை தாண்டியும் இவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே இருந்ததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
ஆட்சி
இருப்பினும் சட்டசபை கலைக்கப்படவில்லை என்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரும் வாய்ப்பு இன்னமும் திறந்தே இருக்கிறது. இந்த நிலையில்தான் ஒரு வழியாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து உள்ளது. எனவே இன்று மதியம் 3 மணிக்கு ஆளுநர் பகத்சிங்கை இக்கட்சியின் குழுவினர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
முதல்வர் பதவி
இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், எந்த முதல்வர் பதவிக்காக பாஜகவை விட்டு சிவசேனா பிரிந்து வந்ததோ, அதே முதல்வர் பதவி இப்போது அதன் கைகளுக்கு கிடைக்க உள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 வருடங்கள்
இதுபற்றி சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் கூறுகையில், இன்னும் 25 ஆண்டு காலத்திற்கும் மகாராஷ்டிராவில் எங்கள் ஆட்சிதான் நடைபெற உள்ளது. முன்கூட்டியே சட்டசபை கலைந்துவிடும் என்ற பாஜகவின் பிரச்சாரத்தை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். எது எப்படியோ ஆட்சியே போனாலும் பரவாயில்லை, முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது சிவசேனா. அது நல்லதோ கெட்டதோ ஆனால் அவர்கள் பிடித்த பிடியில் உறுதியாக இருந்து இப்போது அதை சாதித்துக் கொண்டு உள்ளனர்.
யார் முதல்வர்
ஆனால் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேதான் முதல்வர் ஆவாரா என்பதில் இன்னமும் சந்தேகம் நிலவுகிறது. முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அவரை முதல்வராக காங்கிரஸ் விரும்பவில்லை என்று கூறப்படுவதால் சிவசேனா தரப்பிலிருந்து வேறு ஒருவர் முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.