மகா. அமைச்சரவை விரிவாக்கம்: சிவசேனாவுக்குள் புகைச்சல்... அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிலேயே சூசகம்
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தில் சிவசேனாவில் அதிருப்தி இருக்கிறது என்பதை அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் சூசகமாக தெரிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தவ் தாக்கரே அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
அதேநேரத்தில் சிவசேனாவின் சீனியர் தலைவர்கள் பலரும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்தனர். ஆனால் உத்தவ் தாக்கரே மகன், ஆதித்யா தாக்கரே அமைச்சரவையில் இடம்பெற்றார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்காற்றியவர் சஞ்சய் ராவத். அவரது சகோதரர் சுனில் ராவத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் ராவத், இதனால் எந்த வருத்தமும் இல்லை என கூறியிருந்தார். ஆனால் அவர் ஆசிரியராக உள்ள சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் மூத்த கட்சி தலைவர்களின் அதிருப்தி கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
அதில், திவாகரர் ரோட்டே, ராம்தாஸ் காதம், தனாஜி சாவந்த், தீபக் கேசர்கார், ரவீந்த வாய்கார் ஆகிய மூத்த சிவசேனா தலைவர்கள் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் முறையாக எம்.எல்.ஏ.வான சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்யா தாக்கரே அமைச்சராகியுள்ளது.
ஈழத் தமிழர் அகதி முகாம்களில் கருத்து கேட்ட 2 செய்தியாளர்கள் மீது வழக்கு
சிவசேனாவின் ஒதுக்கீட்டில் சுயேட்சைகளான பாச்சு காடு, சங்கர்ராவ் கடாக், ராஜேந்திர யெட்ராவகர் ஆகியோர் அமைச்சர்களாகி உள்ளனர். ஒரிஜனல் சிவசேனாவினருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என பூடகமாக எழுதப்பட்டுள்ளது. இதனால் சிவசேனாவில் விரைவில் உட்கட்சி பூசல் வெடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதேபோல் அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் குமுறிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.