ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு - நாளை விசாரணை!
Recommended Video
மும்பை : மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறவில்லை. நாளை இவ்வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என மறுத்ததால் சிவசேனாவை ஆளுநர் கோஷ்யாரி அழைத்தார். சிவசேனாவோ 3 நாட்கள் கூடுதல் அவகாசத்தை ஆளுநரிடம் கேட்டிருந்தது.
இதை ஏற்க மறுத்த ஆளுநர் கோஷ்யாரி, தேசியவாத காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தேசியவாத காங்கிரஸும் 2 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டதால் அதையும் ஆளுநர் கோஷ்யாரி நிராகரித்தார்.
இதையடுத்து மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரை செய்து அறிக்கையை டெல்லிக்கு அனுப்பினார். இதனை ஏற்று தற்போது மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே
இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு தொடர்ந்தது. தங்களது மனுவை அவசர மனுவாக விசாரிக்கவும் சிவசேனா வலியுறுத்தியது.
இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற பதிவாளர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச் முன்பாக நாளை முறையீடு செய்யுமாறு சிவசேனாவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதனையடுத்து நாளை உச்சநீதிமன்றத்தில் சிவசேனாவின் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
மேலும் ஆட்சி அமைக்க ஆளுநர் 3 நாட்கள் கால அவகாசம் தராததை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளது. அதன் மீதும் நாளையே விசாரணை நடைபெறக் கூடும்.