எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதங்களுடன் ஆட்சி அமைக்க முதல் முறையாக உரிமை கோரியது காங்-சிவசேனா-என்சிபி
Recommended Video
மும்பை: தங்களது எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதங்களை ஆளுநர் மாளிகையில் என்சிபி, சிவசேனா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.
மகாராஷ்டிரா முதல்வராக பட்னாவிஸுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின் போது பட்னாவிஸ் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து ஆளுநர் அனுப்பிய கடிதம், பட்னாவிஸ் அரசுக்கான எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் ஆகியவற்றை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலையின் என்சிபியின் 53 எம்.எல்.ஏக்கள் சரத்பவார் பக்கம் உள்ளனர். இன்றைய உச்சநீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக என்சிபி-சிவசேனா- காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் கோஷ்யாரியை இன்று காலை சந்தித்தனர்.
அப்போது தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதங்களை அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகையில் இம்மூன்று கட்சி தலைவர்களும் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆளுநர் இதன் மீது என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை.
புதிய அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இத்தீர்ப்புக்குப் பின்னரே இந்த ஆதரவு கடிதத்தின் நிலை என்ன? என்பது தெரியவரும்.