திடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு
மும்பை: நாடாளுமன்ற கூட்டத்தையொட்டி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிவசேனா பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுக்க முயற்சி செய்வதாகவும், அந்த கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வரும் 17ம் தேதி டெல்லியில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி கொண்டுள்ளது சிவசேனா. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிவசேனா பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் இன்று மும்பையில் அளித்த பேட்டியில், சிவசேனா இந்த கூட்டத்தில் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை சாம்னா, பாஜக குதிரை பேரத்தில், ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.
புது ட்விஸ்ட்.. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போவது பாஜகதான்.. சொல்கிறார் பாட்டில்
ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருவதால் இந்த இடைவெளியை பயன்படுத்தி கொண்டு குதிரை பேரத்தில் அந்த கட்சி ஈடுபட்டுவருகிறது. ஏற்கனவே ஆளுநர் அழைப்பு விடுத்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஆட்சி அமைக்க மறுப்பு தெரிவித்த பாஜக, இப்போது திடீரென தங்களால் ஆட்சி அமைக்க முடியும் எனக் கூற தொடங்கியிருப்பது குதிரை பேரத்தில் பின்னணியில்தான். பாஜகவின் பொய்கள் இப்போது அம்பலமாகி வருகின்றன என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
சுயேச்சைகள் ஆதரவுடன் தங்களிடம் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் பலம் இருப்பதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.