பர்தாவுக்கு தடை கேட்கும் சிவசேனா.. நாட்டை பிரித்தாளும் எண்ணம் இது.. ஓவைசி பாய்ச்சல்
மும்பை: இந்தியாவில் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும், என்ற சிவசேனா கட்சி கோரிக்கை, வாக்காளர்களை பிரித்தாளும் சூழ்ச்சி என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், முகத்தை மூடக்கூடிய ஆடைகள், பர்தா ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, சிவசேனா கட்சியின் நாளிதழ் சாமனாவில் கட்டுரை வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள ஓவைசி கூறியதாவது: அந்தரங்க உரிமைகளை உச்சநீதிமன்ற தீர்ப்பு உயர்த்தி பிடித்துள்ளது. பர்தா அணியும் தனிப்பட்ட உரிமை என்பது இந்தியாவின் அடிப்படை உரிமையாகும். சிவசேனா கட்சி நாளிதழில் வெளியாகியுள்ள இந்த கட்டுரை, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்.
எனவே, தேர்தல் ஆணையம், இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இவர்கள்தான் நமது குழந்தைகள் ஜீன்ஸ் அணிந்ததற்கு அடித்தவர்கள். இப்போது இவர்கள் இப்படி சொல்ல காரணம், வாக்காளர்களை பிரித்தாளும் நோக்கத்தில்தான். இவ்வாறு ஓவைசி தெரிவித்துள்ளார்.
இலங்கை போல.. இந்தியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை தேவை.. சிவசேனா கோரிக்கை
இலங்கையில், ஈஸ்டர் தினத்தில், தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், அங்கு பர்தா அணிய அந்த நாட்டு அரசு திடீரென தடை விதித்துள்ளது. இதை மேற்கோள் காட்டி, இந்தியாவிலும், பர்தாவிற்கு தடை விதிக்க, சிவசேனா வலியுறுத்தியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.