மகாராஷ்டிராவில் இந்த 5 வாய்ப்புகளில் ஒன்றுதான் நடக்கப் போகிறது... சஞ்சய் ராவத் ஆரூடம்
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாஜக- சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் என்னதான் அடுத்து நடக்கும் என 5 வாய்ப்புகளை பட்டியலிட்டுள்ளார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை:
சட்டசபை தேர்தல் முடிந்த உடனே சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேவை பெரிய மனதுடன் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே சிவசேனாவுடன் புதிய ஆட்சி குறித்து பேசியிருக்க வேண்டும்.
பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் . ஆனால் பாஜகவின் பிடிவாதத்தால் தேர் இப்போது சகதியில் சிக்கியிருக்கிறது. இந்த தேரை சகதியில் இருந்து மீட்பதற்கு அமித்ஷா தலையிடாமல் இருப்பதும் புதிராக இருக்கிறது.
இனி மகாராஷ்டிராவில் என்னதான் நடக்கும்?
- சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் பாஜக ஆட்சி அமைக்கலாம். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பெரும்பான்மையை நிரூபிக்க 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அக்கட்சிக்கு தேவைப்படும்.
- 2014-ல் தேசியவாத காங்கிரஸ் பாஜகவை ஆதரித்ததைப் போன்ற ஒரு நிலைமை ஏற்படலாம். அப்போது மத்தியில் மகள் சுப்ரியா சூலேவுக்கும் மாநிலத்தில் அஜித் பவாருக்கும் பதவிகள் திரும்ப கொடுக்கப்படலாம். ஆனால் 2014-ல் தாம் செய்தது தவறு என சரத்பவார் கூறியிருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை.
- சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரலாம். சிவசேனாவுக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டதால் அரசை நடத்த முடியும். மூன்று வெவ்வேறான கட்சிகள் ஆட்சி அமைப்பதால் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் உருவாக்கப்படும்.
- பாஜகவும் சிவசேனாவும் தங்களது நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி புதிய ஆட்சியை அமைக்கலாம். இதுதான் மிகச் சரியான வாய்ப்பு. ஆனால் பிடிவாதங்களால் இது சாத்தியமில்லை.
- மத்திய ஏஜென்சிகள் மூலம் கட்சிகளை உடைக்க பாஜக முயற்சிக்கலாம். ஆனால் பிரதமர் மோடியின் இமேஜை இது பாதிக்கும் என பாஜக கருதலாம்.
இவ்வாறு சஞ்சய் ராவத் எழுதியுள்ளார்.