சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு திடீர் நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதல் சிவசேனாவின் நிலைப்பாடுகள் குறித்து அறிவித்து வந்தார் சஞ்சய் ராவத். தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்த போது மட்டும் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசினார்.
மற்ற நேரங்களில் சிவசேனாவின் நிலையை ஊடகங்களில் தொடர்ந்து கூறி வந்தவர் சஞ்சய் ராவத். அத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் சஞ்சய் ராவத் நடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று சஞ்சய் ராவத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் சஞ்சய் ராவத் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.