அப்பாடா.. மகாராஷ்டிரத்தில் ஆட்சி குறித்து ஆளுநராவது முன்னெடுத்தாரே.. சிவசேனா குஷி
மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது குறித்த விவகாரத்தை மாநில ஆளுநராவது முன்னெடுத்தாரே என சிவசேனா மகிழ்ச்சியில் உள்ளது.
மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் என்சிபி 54 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. 288 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு பெரும்பான்மை கிடைக்க 146 இடங்கள் தேவை.
நடந்து முடிந்த தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பதவி வேண்டும்
ஆனால் சிவசேனாவோ முதல்வர் பதவியில் சரிசம பங்கு கேட்டது. ஆனால் பாஜகவோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனினும் சிவசேனா விடாப்பிடியாக எதற்கு மசியாமல் முதல்வர் பதவியிலேயே குறியாக இருக்கிறது.
மகாராஷ்டிர ஆளுநர்
இதையடுத்து என்சிபி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்தது. ஆனால் அதற்கு இரு கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தேவேந்திர பட்னவீஸ் முதல்வர் பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு பட்னவீஸை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக் கொண்டார்.
சிவசேனா
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்தார். மேலும் பெரும்பான்மையை சட்டசபையில் 11-ஆம் தேதிக்குள் நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இதை சிவசேனா வரவேற்றுள்ளது.
உரிமை அதிகம்
இதுகுறித்து சிவசேனையின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் கூறுகையில் ஆட்சி அமைப்பது குறித்த நடவடிக்கைகளை ஆளுநராவது தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாஜக தனி பெரும் கட்சியாகும். அதிக தொகுதிகளை பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்க முதலில் உரிமை கோர அக்கட்சிக்கே உரிமை உண்டு என்றார்.