மகாராஷ்டிரா: சிவசேனாவின் சீண்டிப் பார்க்கும் தேர்தல் பிரசாரம்- அதிருப்தியில் பாஜக?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அடுத்தடுத்த தேர்தல் பிரசாரங்கள் பாஜகவுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணியும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் மோதுகின்றன. பாஜக-சிவசேனா இடையேயான தொகுதி பங்கீடு விவகாரம் தொடக்கம் முதலே இழுபறியாகத்தான் இருந்தது.
விஜயதசமி, தசரா: வடமாநிலங்களில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சிவசேனாவுக்கு 124 தொகுதிகள்
வேறுவழியில்லாமல் பாஜக கொடுத்த 124 தொகுதிகளை சிவசேனா ஏற்றுக் கொண்டது. 150 தொகுதிகளில் பாஜகவும் எஞ்சிய 14 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வொர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல்வர் கனவில் ஆதித்யா
பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதன் முதலாக தேர்தலில் போட்டியிடுகிறார் ஆதித்யா தாக்கரே. அதனால் சிவசேனா தொண்டர்கள், அவரை முதல்வர் வேட்பாளராக பார்க்கின்றனர். ஆனால் பாஜகவோ, எப்படியும் தனித்தே ஆட்சியை பிடிப்போம் என்கிற பாஜகவுக்கு குடைச்சலாக இருக்கிறது. சிவசேனா அதிக இடங்களில் வென்றால் ஆதித்யா தாக்கரே துணை முதல்வராகக் கூடும்.
சமரச கூட்டணி
இதனைக் குறிப்பிடும் வகையில்தான் உத்தவ் தாக்கரேவின் பேட்டி ஒன்றும் இருக்கிறது. அந்த பேட்டியில், பல்வேறு சமரசங்களுக்கு இடையேதான் கூட்டணியை ஒப்புக் கொண்டோம். அதேநேரத்தில் ஆதித்யா தாக்கரே முதல்வர் நாற்காலியில் அமருவதற்கு இன்னும் காலம் இருக்கிறது என கோடிட்டுக் காட்டினார் உத்தவ் தாக்கரே.
கூட்டணி தர்மம்
சிவசேனாவின் மற்றொரு மூத்த தலைவரான சஞ்சய் ரவுத் தசரா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், முதல்வர் நாற்காலியில் சிவசேனா அமரும்; கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதால் அடக்கி வாசிக்கிறோம். எங்களுக்கு தேர்தலில் வெல்வதை விட அமைச்சரவையில் எங்கள் கொடி உயரப் பறக்க வேண்டும் என்பதுதான் இலக்கு என பேசினார். மேலும் ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவை நீக்க வேண்டும் என முதல் குரல் எழுப்பியவர் பால் தாக்கரே. அதை பாஜக அரசு நிறைவேற்றிய ஒரு காரணத்துக்காகவே கூட்டணி அமைத்திருக்கிறோம் என்றார்.
|
பாஜக தலைவர்கள் டென்ஷன்
அத்துடன் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் முதலாவது செங்கல் சிவசேனாவினுடையதாகவே இருக்கும் எனவும் சஞ்சய் ரவுத் பேசியிருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி என்றாலும் பிடிகொடுக்காமலே பிரசாரம் செய்து வரும் சிவசேனாவின் போக்கு அக்கட்சியை அதிருப்தி அடைய வைத்திருப்பதாக அக்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.