மகாராஷ்டிராவில் அடுத்த 25 வருஷத்துக்கு எங்க ஆட்சி தான்.. பாஜகவை வம்பிழுத்த சிவசேனா
Recommended Video
மும்பை: சிவசேனா தலைமையில் காங்கிரஸ் மற்றும் என்சிபி ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைய உள்ளது. இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் அடுத்த 25 வருஷத்துக்கு எங்கள் ஆட்சி தான் நடக்கும் என்று கூறி சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் , பாஜகவை சீண்டியுள்ளார்.
சிவசேனா கட்சியை பால் தாக்கரே கடந்த 1966ம் ஆண்டு ஆரம்பித்தார். அந்த கட்சி பின்னாளில் இந்துத்துவா சித்தாந்தத்தை கையில் எடுத்த நிலையில் பாஜகவும் அதே சித்தாந்தம் உடைய கட்சி என்பதால் இரு கட்சிகளும் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருந்தன.
இந்த கூட்டணி யாருக்கு முதல்வர் என்ற போட்டியில் உடைந்து போனது. இதனால் கூட்டணியை விட்டு வெளியேறிய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. நாளை காங்கிரஸ், சிவசேனா, என்சிபி ஆகிய மூன்று கட்சி தலைவர்களும் இணைந்து ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோர உள்ளனர்.
சிவசேனா, என்சிபி, காங். தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு- ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர்?
மக்கள் நலன்
இந்நிலையில் சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் என்.சி.பி உடன் ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இது மாநில மற்றும் மக்களின் நலனுக்காக இருக்கும்.
நிகழ்ச்சி நிரல்
அமைய உள்ள அரசு இது ஒரு கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி, கூட்டணியாக இருந்தாலும் சரி, ஆட்சிக்கான நிகழ்ச்சி நிரல் அவசியம். உள்கட்டமைப்பு திட்டங்கள் (பருவமழை பிரச்சனை, வறட்சி, பொதுவான பிரச்சனை) முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும். எங்களுடன் வருபவர்கள் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள். அவர்களின் அனுபவத்திலிருந்து நாங்கள் பயனடைவோம் என்றார்.
25 வருடத்திற்கும்
சுழற்சி முறையில் முதல்வர் பதவி மாற்றி அமைக்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், 'மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார். யார் என்ன முயற்சி செய்தாலும் மகாராஷ்டிராவில் சிறப்பான தலைமையை சிவசேனா வழங்கும்.
உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா மக்களுக்கும் எங்களுக்குமான உறவு நிரந்தரமானது. கடந்த 50 ஆண்டுகளாக எங்களது கட்சி உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. அதிகாரப்பகிர்வு குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. உத்தவ் தாக்கரே அந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்பார்" என்று ராவத் தெரிவித்தார்.