ரபேல் ஒப்பந்தம் யாருக்கு? நாட்டுக்கா.. இல்ல தொழிலதிபர்களுக்கா? பாஜகவை விளாசி தள்ளும் சிவசேனா
மும்பை: ரபேல் போர் விமான ஒப்பந்தம் நாட்டுக்காவா அல்லது தொழில் அதிபர்களுக்கா என்று பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று சிவசேனா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ரபேல் போர் விமான ஒப்பந்தம் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தாம் செல்லும் இடங்களில் எல்லாம் ரபேல் குறித்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தே பேசுகிறார்.
மற்ற எதிர்க்கட்சிகளும் ரபேல் விவகாரத்தில் மோடி அரசை கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. எதிர்க் கட்சிகள் தான் என்று இல்லை.. தற்போது கூட்டணி கட்சிகளும், ஆதரவு தரும் கட்சிகளும் மத்திய அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு திக்குமுக்காட வைக்கின்றன.
ரபேலில் ஆட்சேபனை
அண்மையில், ரபேல் போர் விமானத்தின் விலை விவரம் குறித்து பிரான்ஸ் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகம் பேரம் பேசியதற்கு அப்போதைய பாதுகாப்பு துறை செயலர் ஆட்சேபனை தெரிவித்தார் என்று செய்தி வெளியானது. தற்போது அந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு பிரதமர் மோடியை சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
சாம்னாவில் தலையங்கம்
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: லோக்சபாவில் பிரதமர் மோடி நாட்டுப்பற்று குறித்து பேசினார். ரபேல் ஒப்பந்தத்தை ஆதரித்து பேசிய அவர், தன்னையும், பாஜகவையும் விமர்சிக்கலாம். ஆனால் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தை விமர்சிக்க கூடாது என்று கூறினார்.
நாட்டுப்பற்றாளர்கள்
ஆனால், தற்போது நாளிதழில் செய்தி வெளியானதும் அனைத்து நாட்டுப் பற்றாளர்களும் அமைதியாகி விட்டனர்.நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் விளக்கம் கேட்பது எவ்வாறு தேசத்தை விமர்சிப்பதாகும்?
தேசத்துரோகிகளா என்று கேள்வி
தேசப்பற்று என்பதன் அர்த்தம் பாஜக ஆட்சியில் மாறிவிட்டது. ரபேல் ஒப்பந்தத்தை பாராட்டினால் அவர்கள் தேசப்பற்று உடையவர்கள்... விமர்சித்தால் தேசத்துரோகிகளா?
தெளிவாக தெரியும் அக்கறை
பாதுகாப்பு படையை வலிமைப்படுத்த காங்கிரஸ் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ள வில்லை என்று மோடி குற்றம்சாட்டினார். ஆனால் நாளிதழில் வெளியான செய்தியில் இருந்து, அவர் எந்த அளவுக்கு இந்த ஒப்பந்தத்தில் அக்கறை காட்டியுள்ளார் என்பது தெரியவருகிறது.
ஒதுக்கி வைக்கப்பட்டனர்
ரபேல் ஒப்பந்தத்தை மோடி நேரடியாக கையாண்டு இருக்கிறார். இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு துறை செயலர் ஆகியோர் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
உண்மையை கூறவேண்டும்
எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் அரசியல் ஆதாயத்துக்காக இந்த பிரச்னையை எழுப்பலாம். ஆனால் உண்மையை அனைவருக்கும் தெரியப் படுத்த வேண்டும்.இந்த ஒப்பந்தம், விமானப்படையை வலிமைப் படுத்துவதற்காகவா? இல்லை நிதி நெருக்கடியில் இருக்கும் தொழிலதிபர்களை வலிமைப்படுத்துவதற்காகவா? என்று பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.
விளக்கமளிக்க வேண்டும்
ரூ. 500 கோடியில் வாங்க வேண்டிய விமானம் ரூ. 1, 600 கோடியில் வாங்கப் படுவதன் காரணம் என்ன என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும். நான்கரை ஆண்டுகளாக மோடி தனியாளாக நாட்டை ஆட்சி செய்து வருகிறார் என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.