யாருங்க இந்த சஞ்சய் ராவத்.. நமக்கே பார்க்கணும் போல இருக்கே!
மும்பை: கடந்த ஒரு மாதகாலமாக மஹாராஷ்டிராவில் நிலவிய அரசியல் குழப்பத்திற்கு மத்தியில், தலைப்புச் செய்திகளில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் சஞ்சய் ராவத்.
சிவசேனா எம்.பி.யான இவர் இக்கட்டான நேரத்தில் உத்தவ் தாக்கரேவின் குரலாக ஒலித்ததோடு மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறும் துணிச்சலான முடிவையும் அறிவித்தவர்.
கடந்த கால் நூற்றாண்டு கால உறவை உதறித்தள்ளுகிறோம் என்ற எந்த நெருடலும் இல்லாமல் சிவசேனாவின் முடிவை அறிவித்து அமித்ஷாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தவர்.
சென்னை உட்பட சில பகுதிகளில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு.. இலங்கை கடலில் சூறாவளி: புவியரசன் தகவல்
சிவசேனா குரல்
மஹாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே சிவசேனாவின் குரலாக ஊடகங்களில் ஒலித்தவர் சஞ்சய் ராவத் மட்டுமே. தாக்கரே குடும்பத்துடன் கடந்த 40 ஆண்டுகாலமாக மிகுந்த நெருக்கத்தில் இருப்பதுடன், சிவசேனா நாளிதழான சாமனாவில் நிர்வாக ஆசிரியராகவும் இருக்கிறார். உத்தவ் தாக்கரே மனதில் நினைப்பதை ஊடகங்களில் பிரதிபலிக்கும் ஆற்றலுடையவர் இந்த சஞ்சய் ராவத்.
1980 முதல்
சஞ்சய் ராவத் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். 1980-ல் மராட்டிய நாளிதழான லோக் சட்டாவில் இருந்து சிவசேனா நாளிதழான சாமனாவுக்கு பணிக்காக மாறி வந்தார். அவருடைய கூர்மையான எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் பால் தாக்கரேவை கவர்ந்து போக, சஞ்சய் ராவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல விவகாரங்களை அவருடன் மனம் விட்டு ஆலோசிக்கும் அளவுக்கு சென்றார்.
கட்சியினர் மரியாதை
பால் தாக்கரேவே அப்போது யாரும் நெருங்க முடியாத காலத்தில், சிங்கத்தின் குகைக்குள் சென்று திரும்புவதை போல், அடிக்கடி பால் தாக்கரேவை சந்தித்து பேசும் வாய்ப்பு சஞ்சய் ராவத்திற்கு கிட்டியது. பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் சாமனா தலையங்கம் தொடர்பாக இந்த சந்திப்புகள் நடைபெற்றன. இது சிவசேனா கட்சியினர் மத்தியில் அவருக்கு பெரும் வெளிச்சத்தையும், புகழையும் தேடி தந்தது.
பிம்பம் உடைப்பு
ஒரு காலத்தில் சிவசேனா என்றால் வன்முறைக் கட்சி என்ற பிம்பம் தேசிய அளவில் ஏற்பட்ட போது, அதனை உடைத்தெறிய அளப்பரிய பங்காற்றியவர் சஞ்சய் ராவத். தனக்கு இருந்த பத்திரிகையாளர்கள் தொடர்பு மூலம் வன்முறை கட்சி என்ற பிம்பத்தை மாயமாக்கி, சிவசேனா அனைத்து தரப்புக்குமான கட்சி என்ற பிம்பத்தை கொண்டு வந்தார்.
தீவிர விசுவாசி
சஞ்சய் ராவத்தின் தீவிர விசுவாசமும், அணுகுமுறையும் தாக்கரே குடும்பத்துக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அவரையும் தங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதத் தொடங்கினர். இதனிடையே 2006-ல் பால் தாக்கரேவின் அண்ணன் மகன் ராஜ் தாக்கரே சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்று நவ நிர்மாண் தொடங்கிய போது சஞ்சய் ராவத்தும் அவருடன் சென்றுவிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் அவர் பால் தாக்கரேவின் வாரிசான உத்தவுக்கு துணையாக நின்றார். இன்றும் துணையாக நிற்கிறார்.
அதிர்ச்சி வைத்தியம்
பாஜகவுடனாக கால் நூற்றாண்டு கால உறவை முறித்துக்கொள்ளும் விவகாரத்தில் உத்தவே தயங்கிய போது, அசாத்திய துணிச்சலுடன் அந்த முடிவை எடுத்து அமித்ஷாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். இவர் இப்போது சிவசேனா சார்பில் மூன்றாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது.