புதிய திருப்பம்.. சிவசேனாவின் கடைசி முயற்சியும் தோல்வி.. சுக்குநூறாகிறதா முதல்வர் கனவு?
மும்பை: மகாராஷ்டிரத்தில் சிவசேனாவுடன் கூட்டணி இல்லை என சரத்பவார் கூறிவிட்டதால் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கலாம் என்ற சிவசேனாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் களத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகளும் வெளியான நிலையில் இன்னும் அங்கு யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவாகவில்லை.
இந்த நிலையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வர் பதவியில் சிவசேனா சரிசம பங்கு கேட்டதால் இரு கட்சிகளுக்கிடையேயும் மோதல் போக்கு எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர்
இந்த நிலையில் நாளைக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி என பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாஜக தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது.
சரத்பவார்
அதன்படி சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்தார். அப்போது மும்பை அரசியல் குறித்து இருவரும் பேசிக் கொண்டதாக தெரிகிறது. மேலும் தங்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ராவத் பவாரிடம் பேசினார் என கூறப்படுகிறது.
சிறப்பாக இல்லை
இந்த சந்திப்பு குறித்து சரத்பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில் சிவசேனாவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் அரசியல் சட்ட நெருக்கடி ஏற்படுத்த விரும்பவில்லை. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துடன் நடத்திய பேச்சு சிறப்பாக இல்லை என தெரிவித்துள்ளார்.
மேஜிக் நம்பர்
இதனால் பாஜக ஆதரவின்றி காங்கிரஸ்- என்சிபி துணையுடன் ஆட்சி அமைக்க முயன்ற சிவசேனாவின் கடைசி முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இந்த 3 கட்சிகளும் கூட்டணி அமைக்க ஒப்புக் கொண்டிருந்தால் பெரும்பான்மை பலம் 154 ஆக இருந்திருக்கும் (சேனா- 56, என்சிபி 54, காங்கிரஸ் -44). இது மேஜிக் நம்பர் 146-ஐ காட்டிலும் அதிகமாகும்.
என்னவாகும்
காங்கிரஸ், என்சிபி ஆகியவற்றில் ஒரு கட்சி கூட்டணி அமைக்க முன்வராவிட்டாலும் சிவசேனாவின் முயற்சி தோல்வியில் முடியும் என்பது தெரிந்த விஷயம்தான். ஏற்கெனவே சிவசேனாவுடன் கூட்டணி இல்லை என என்சிபி தலைவர் சரத்பவாரிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நாசுக்காக தெரிவித்துவிட்ட நிலையில் தற்போது என்சிபியும் கூட்டணி இல்லை என தெரிவித்துவிட்டது.
முதல்வர் நாற்காலி
இதனால் சிவசேனா- பாஜக இடையே சமாதானம் நடைபெற்று ஆட்சி அமைப்பதுதான் தீர்வு என்பது தெளிவாகிறது. எனவே சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்குமா, இல்லை பாஜக கொடுப்பதை வாங்கி கொண்டு சிவசேனா ஆதரவு கரம் நீட்டுமா, முதல்வர் நாற்காலி என்ற பால் தாக்கரேவின் கனவு மெய்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.